லோக்சபா தேர்தல் நடத்தும்போது.. இந்த 21ஐயும் சேர்த்து நடத்திருங்க... பாஜகவை அழுத்தும் அதிமுக!
சென்னை: லோக்சபா தேர்தல் நடத்தும்போது தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபைத் தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும் என்று பாஜகவை நெருக்கி வருகிறதாம் அதிமுக.
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணிகள் அமைப்பதில் கட்சிகள் பிசியாக இருக்கும் சூழலில் அதிமுக 21 தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. கூட்டணி அமைத்ததில் பாமகவுக்கு 7+1 என்று அள்ளிக் கொடுத்தது கூட அவர்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் இடைதேர்தலில் தங்களுக்கு கிடைத்து விட வேண்டும் என்ற கணக்கில்தான். கூட்டணி ஒப்பந்தமும் அவ்வாறுதான் போடப்பட்டுள்ளது.
கட்சிக்குள் சில எதிர்ப்பு குரல்கள் கேட்டாலும் வட மாவட்டங்களில் பாமக வலுவாக இருப்பதால் நடைபெறவுள்ள 21 தொகுதிகளில் எப்படியேனும் 9 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதே அதிமுகவின் இப்போதைய ஒரே குறிக்கோள். 9 தொகுதிகளில் ஒரு தொகுதியில் வெற்றிவாய்ப்பை பறிகொடுத்தால் கூட நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலே ஆட்சி கவிழ்ந்து விடும் என்பதுதான் எதார்த்தம்.

21 தொகுதி இடைத் தேர்தல்
இந்த சூழலில் இதுவரை உள்ளாட்சி தேர்தல் என்றாலோ அல்லது அறிவிக்கப்பட்ட இடைதேர்தல் என்றாலோ அஞ்சி நடுங்கி வந்த அதிமுக இப்போது வரும் நாடாளுமன்ற தேர்தலோடு இணைத்து எப்படியேனும் 21 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்தி விடுவது என்று முனைப்பாக வேலை செய்து வருகிறது.

வாய்ப்பு குறைவு
இது குறித்து அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே பாஜக கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவே கூறப்படுகிறது.

பாஜக வெல்லாமல் போனால்
தேர்தலுக்கு பிந்தைய சூழல் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் சாதகமாக மாறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளதால் அதன் பிறகு நடைபெறும் இடைதேர்தலில் மக்களின் மன நிலையும் வேறு மாதிரி திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கூறுகிறார்கள்.

சூட்டோடு சூடாக
மத்தியில் ஆட்சி மாற்றம் நடைபெற்று விட்டால் இடைதேர்தலுக்கான ஒட்டு மொத்த சூழலும் மாறும். ஆனால் இப்போதைய நிலையில் ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ் அணிக்கே இரட்டை இலை கிடைத்திருப்பது கட்சியினருக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.

பணக்கணக்கு + மனக்கணக்கு
இப்போது வழங்கப்பட்டு வரும் ரூ.2000 நிதியுதவி தேர்தலில் மிகப்பெரிய பங்காற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது இதையெல்லாம் கணக்கிட்டுத்தான் வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்தே 21 தொகுதிகளுக்கான இடைதேர்தலை எப்படியாவது நடத்திட வேண்டும் என்று அதிமுக அழுத்தம் கொடுத்து வருகிறதாம்.

பயன்படுத்திக் கொள்வோம்
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு என்றால் ஒருவேளை பாமக எதிர்பார்ப்பது போன்ற வெற்றி கிடைக்கவில்லை என்றால் 21 தொகுதி இடைதேர்தலில் பாமக எந்த அளவுக்கு களப்பணி செய்வார்கள் என்ற சந்தேகமும் அதிமுக தரப்பில் உள்ளதாக தெரிகிறது.

உண்மையாக உழைப்பார்கள்
இப்போது என்றால் பாமக தலைமையே கூட 21 தொகுதிகளிலும் சென்று அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகவே இப்போதிருக்கும் சாதகங்களை பயன்படுத்தி வெற்றி வாய்ப்பை தனதாக்கி கொள்ள அதிமுக படு தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது.












Click it and Unblock the Notifications