அந்த ஃபைல் தொலைஞ்சது எப்படி?.. தோண்டுங்க சார் சிதம்பரத்தை.. எகிறி குதிக்கும் அ.தி.மு.க.
Recommended Video
சென்னை: சிங்கம் கூண்டில் சிக்கியதும், இதுதான்டா டைம்!ன்னு ஆளாளுக்கு வெச்சு மிரட்டல் செய்வாங்களாம். அது மாதிரி, ஆனானப்பட்ட ப.சிதம்பரத்தை அமித்ஷா அண்ட்கோ செம்ம ஸ்கெட்ச் போட்டு தூக்கிவிட்ட நிலையில், அவரிடம் அதை விசாரியுங்க, இதை விசாரியுங்க! என்று போட்டுப் பொளந்து கொண்டிருக்கின்றன அவரைப் பிடிக்காத எதிர்கட்சியினர்.
வகை தொகை இல்லாத உட்பூசலுக்கு சொந்தக்கார காங்கிரஸில், சிதம்பரத்துக்கு எதிரான கோஷ்டியின் முக்கிய புள்ளிகளோ, சிதம்பரம் பற்றி அவர்கள் அறிந்த சிதம்பர ரகசியங்களையும் எதிர்கட்சியில் இருக்கும் தங்கள் நண்பர்களுக்கு எடுத்துக் கொடுத்து, அவை பற்றியும் விசாரணை நடத்த சொல்லி கோரிக்கை வைக்குமாறு தூண்டிவிடுகிறார்களாம். என்னதான் இன்று புகாருக்கு ஆளாகி இருந்தாலும் கூட சிதம்பரத்தின் அரசியல் சாதுர்யம், மதிநுட்பம், வழக்கறிஞர் மூளை, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட அறிவு ஆகியவை வியக்கத்தக்கன.
ராஜீவ், சோனியா என்று காங்கிரஸை நிர்வகிக்கும் குடும்பத்தின் சீனியர்கள் மட்டுமில்லாது ராகுல், பிரியங்கா என ஜூனியர்கள் வரை பெரும் மரியாதையும், நம்பிக்கையும் சேர்த்து வைத்திருப்பவர். இதை தகர்ப்பதுதான் சிதம்பரத்தின் எதிராளிகளின் நோக்கமாக இருக்கிறது. அதனால்தான் எதிர்கட்சியினருக்கு சிதம்பரம் பற்றிய விஷயங்களை போட்டுக் கொடுக்கின்றனர்.

ஆகாத அதிமுக
இந்த சூழலில் எப்போதுமே சிதம்பரத்துக்கும் அ.தி.மு.க.வுக்கும் ஆகாததாகவே இருந்திருக்கிறது. ஜெயலலிதா பெரும் அரசியல் ஆளுமையாக தலையெடுத்தபோது அவரை முடக்க முயன்ற பெரும் புள்ளிகளில் சிதம்பரமும் ஒருவர் என்பதே அ.தி.மு.க.வின் பெரும் கோபம். இதனாலேயே அந்த இரு தலைவர்களுக்கும் இடையில் பிரச்னைகள் ஓடிக் கொண்டேஇருந்தன.

தீவிர விசாரணை
இந்த நிலையில் இப்போது சிதம்பரத்தை சுற்றி விசாரணை வளையங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில், அ.தி.மு.க.வும் தன் பங்குக்கு ஒரு வெடிகுண்டை பற்ற வைத்துள்ளது. இதுபற்றி வெளிப்படையாக பேட்டி கொடுத்திருக்கும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் "முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதும், அந்த கொலைக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டது குறித்து விசாரிக்க வர்மா கமிஷனும், கொலை குறித்து விசாரிக்க ஜெயின் கமிஷனும் அமைக்கப்பட்டது.

காணாப் போச்!
இதில் வர்மா கமிஷன் தனது அறிக்கையை சிதம்பரத்திடம் அளித்தது. அதை உரிய உயர் அமைப்பு அவரிடம் தரச்சொல்லி கேட்டபோது, ‘அந்த அறிக்கை காணாமல் போய்விட்டது.' என அசால்டாக சொல்லிவிட்டார். தங்கள் கட்சியின் தலைவரை குரூரமாக கொன்றிருக்கின்றனர், அதற்கு நீதி கிடைப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனின் அறிக்கை தொலைந்து போய்விட்டது! என்று இவர் அலட்சியமாக கூறினால் எப்படி ஏற்பது?

விசாரிக்க வேண்டும்
தன்னை உச்சத்துக்கு ஏற்றிவிட்ட ராஜீவ்காந்தியின் குடும்பத்துக்கு சிதம்பரம் செய்த துரோகம் அது. எனவே அதிமுக்கியமான அந்த அறிக்கை காணாமல் போனது எப்படி? ஏன்? அதில் சிதம்பரத்தின் பங்கு என்ன? என்பதையெல்லாம் பற்றி இப்போது அவரிடம் தோண்டித் துருவி விசாரிக்க வேண்டும்." என்கிறார்.
சர்தான்!
- ஜி.தாமிரா












Click it and Unblock the Notifications