சென்னை ஐகோர்ட் முன்பாக திரண்ட வழக்கறிஞர்கள்.. E-Filling முறையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!
சென்னை: நீதிமன்றங்களில் E-Filing முறையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் திரண்டு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். வழக்கறிஞர்களுக்கு சிரமத்தையும், கார விரயத்தையும் ஏற்படுத்தி வரும் இ-ஃபைலிங் நடைமுறையை போதிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்றங்களில் இ -ஃபைலிங் முறை கட்டாயமாக்கப்படுவதை கண்டித்தும், அதற்கான கட்டமைப்புகளை செய்து கொடுத்த பின்பு நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும், இ -ஃபைலிங் செய்வதற்கு ஏராளமான சேவை மையங்களை தொடங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இ - ஃபைலிங் செய்யும் போது விரைவான இணைய வசதி இருத்தல் வேண்டும். அதனால், விவசாயம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளுக்கு என தனி செயற்கைக்கோள் தொடர்பு வசதி இருப்பது போல, நீதித்துறைக்கும் தனி செயற்கைக்கோள் தொடர்பை அமைத்தல் வேண்டும். இதேபோல், நீதித்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவையான பணியாளர்களை வேலையில் அமர்த்த வேண்டும். இந்த வேலைக்கு என இன்றைக்கு 40 ஆயிரம் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 8 ஆயிரம் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இதுபோல் பணியாளர்கள் அமர்த்தப்படும் போது தான், இ - ஃபைலிங் செய்யும் வேலை சுலபமாகும் என்பது வழக்கறிஞர்கள் தரப்பின் வாதம்.
போதிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் இ-ஃபைலிங்கை நடைமுறைப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி இன்று சென்னை ஐகோர்ட் முன்பாக நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இ-ஃபைலிங் முறையை நடைமுறைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications