10 நாட்களுக்கு பிறகு தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின்.. மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினார்!
சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பிய நிலையில், 10 நாட்களுக்குப் பிறகு இன்று தலைமைச் செயலகம் வருகை தந்தார். பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
கடந்த ஜூலை 21 ஆம் தேதி காலை நடைபயிற்சியின்போது தலைச்சுற்றல் ஏற்பட்டதால், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார். ஆஞ்சியோ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்திய நிலையில், மருத்துவமனையில் இருந்தபடியே அவர் அரசுப் பணிகளை மேற்கொண்டார்.

மருத்துவமனையில் இருந்தே அரசு அலுவல்கள்
குறிப்பாக, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களுக்கு வந்திருந்த பொதுமக்களுடன் தொலைபேசி வாயிலாக பேசியதுடன், தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பாக திமுக மண்டலப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடியின் தமிழக வருகையின்போது, தமிழக வளர்ச்சிப் பணிகள் தொடர்பான மனுவை பிரதமரிடம் வழங்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். அவரது ஒப்புதலின்பேரில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமர் மோடியிடம் வழங்கினார்.
டிஸ்சார்ஜ் ஆன முதல்வர்
உடல்நிலை குணமடைந்த நிலையில், கடந்த ஜூலை 27 ஆம் தேதி முதல்வர் வீடு திரும்பினார். பின்னர் சில நாட்கள் வீட்டில் ஓய்வில் இருந்த முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் தலைமைச் செயலகத்துக்கு வந்துள்ளார். 10 நாட்களுக்குப் பிறகு தலைமைச் செயலகத்துக்கு இன்று வருகை தந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். தொடர்ந்து, வழக்கமான பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.
இன்று தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின்
இன்று காலை 10.15 மணியளவில் முதலமைச்சர் அலுவலக நுழைவாயில் அருகில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று. 2025-26 ஆம் கல்வி ஆண்டில் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களான இந்திய தொழில்நுட்ப கழகம், ஒன்றிய பல்கலைக்கழகங்கள், தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனம், தேசிய சட்டப் பல்கலைக்கழகம், Miranda Ilouse, University of Delhi போன்றவற்றில் சேர்க்கை பெற்ற 135 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.
காவல்துறை சார்பில் 27 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 13.54 கோடி ரூபாய் செலவிலும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் 60 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் தடய அறிவியல் துறை சார்பில் 3 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள போதை மருந்து ஆய்வுப் பிரிவுகள் ஆகியவற்றை திறந்து வைத்து, 229.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மதுரை மத்திய சிறைச்சாலை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் தட்டச்சர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 39 நபர்களுக்கும், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் கருணை அடிப்படையில் திருமதி கிருஷ்ணவேனி என்பவருக்கும் பணி நியமன ஆணையினையும் வழங்கினார்.
3 ஆம் தேதி தூத்துக்குடி செல்லும் ஸ்டாலின்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்ட "தமிழ்நாடு மாநில திருநங்கையர் கொள்கை-2025"-யினை வெளியிடுகிறார். வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் 27 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 மாநிலவரி அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 12 சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் செங்கல்பட்டு பதிவு மாவட்டத்தில் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தினை பிரித்து புதியதாக உருவாக்கப்பட்டுள்ள நாவலூர் மற்றும் கேளம்பாக்கம் ஆகிய 2 புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றை திறந்து வைத்துள்ளார்.
இந்நிலையில் தூத்துக்குடியில் வருகிற 4 ஆம் தேதி நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து, கார்களின் முதல் விற்பனையையும் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 3 ஆம் தேதி மாலை சென்னையில் இருந்து அவர் விமானம் மூலமாக தூத்துக்குடிக்கு செல்ல இருக்கிறார்.












Click it and Unblock the Notifications