அதிமுகவின் கோட்டையை தகர்த்த அமைச்சர்! 22 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வசமாகும் மாமல்லபுரம் பேரூராட்சி!
நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் திமுகவிடம் பேரூராட்சியை பறிகொடுக்கும் அதிமுக.
சென்னை: கடந்த 22 ஆண்டுகளாக அதிமுக வசம் உள்ள மாமல்லபுரம் பேரூராட்சியை நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் திமுக வசமாக்கும் நடவடிக்கைகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.
அதிமுக கவுன்சிலர்கள் 2 பேர் அமைச்சர் தாமோ அன்பரசனை நேரில் சந்தித்து திமுகவில் இணைந்திருப்பதால் பேரூராட்சியில் மெஜாரிட்டியை இழந்துள்ளது அதிமுக.
மாமல்லபுரம் பேரூராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த வளர்மதியும், துணைத் தலைவராக அதேக் கட்சியை சேர்ந்த ராகவனும் கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாமல்லபுரம் பேரூராட்சி
மாமல்லபுரத்தை பொறுத்தவரை தமிழகத்தின் முக்கியமான பேரூராட்சிகளில் ஒன்றாகும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லக்கூடிய இடம் என்பதால் எப்போதுமே மாமல்லபுரம் ஸ்பெஷலான பேரூராட்சி தான். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 15 வார்டுகளை உள்ளடக்கிய மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சியில் அதிமுக 9 வார்டுகளிலும் திமுக 4 வார்டுகளிலும் மதிமுக 1 வார்டிலும், சுயேச்சை 1 வார்டிலும் வெற்றிபெற்றது.

22 ஆண்டுகளாக
மாமல்லபுரம் பேரூராட்சியை 22 ஆண்டுகளாக அதிமுக நிர்வகித்து வரும் நிலையில், இப்போது அந்தப் பேரூராட்சி திமுக வசமாக உள்ளது. ஆம் அதிமுக கவுன்சிலர்கள் 9 பேரில் 2 பேர் அமைச்சர் தாமோ அன்பரசனை நேரில் சந்தித்து திமுகவில் இணைந்திருக்கின்றனர். இதனால் அதிமுகவின் பலம் 7 ஆக குறைந்துள்ளது. அதேவேளையில் திமுக ஆதரவு கவுன்சிலர்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

திமுகவினர் உற்சாகம்
இதனால் அதிமுகவை சேர்ந்த மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி மீதும் துணைத் தலைவராக உள்ள ராகவன் மீதும் திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவர்களது பதவிகளை பறிக்க காய் நகர்த்தியுள்ளனர். 22 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரம் பேரூராட்சி திமுக வசமாகவுள்ளதால் அப்பகுதி திமுகவினர் உற்சாகத்துடன் வலம் வருகின்றனர்.

2வது நிகழ்வு
அண்மையில் கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியச் சேர்மன்அதிமுகவை சேர்ந்த லதா நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் தனது பதவியை பறிகொடுத்தார். இப்போது மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் அதிமுகவை சேர்ந்த வளர்மதி பதவியை பறிகொடுக்கும் சூழல் வந்துள்ளது.












Click it and Unblock the Notifications