3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’!
திருச்சி: விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன், தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததன் காரணமாக இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குப் பிறகு விஜய் முதன்முறையாக ஜனநாயகன் வெளியாகாதது குறித்து மக்கள் மத்தியில் பேசியுள்ளார்.
விஜய் கடைசியாக நடித்திருந்த படம் 'ஜனநாயகன்'. இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்காக பெரிய அளவில் ப்ரமோஷன்கள் செய்யப்பட்டு, பட வேலைகள் துரிதமாக முடிக்கப்பட்டன. கடந்த ஜனவரி 9ஆம் தேதி படம் வெளியாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.

ஜனநாயகன் திரைப்படத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் கூறியதை அடுத்து, படக்குழு ஒரு முக்கிய முடிவை எடுத்தது. படத்தை எப்படியாவது சொன்ன தேதிக்குள் ரிலீஸ் செய்து விட வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரி, படக்குழு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு குறித்து அன்றைய நாளில் வந்த தீர்ப்பில், படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் நீதிபதி பி.டி.ஆஷா இந்த உத்தரவை பிறப்பித்ததற்கு எதிராக மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்து. இந்த மேல் முறையீட்டு மனுவின் விசாரணையே பல நாட்கள் நடந்ததால், இப்படியே சென்றால் எப்படியும் படத்தை வெளியிட முடியாது என்று நினைத்த படக்குழு, தங்களின் மனுவை திரும்ப பெற்றுக்கொண்டது.
ஜனநாயகன் திரைப்படத்தை, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், சில வாரங்களுக்கு முன்பு மறு தணிக்கைக்காக பார்த்ததாக கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் தணிக்கை சான்றிதழ் கிடைத்து விடும், படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என்று நம்பிக்கையாக இருந்த நேரத்தில் இன்னொரு சிக்கல் எழுந்தது. ஜனநாயகன் படத்தில் அரசியல் வசனங்கள் இருப்பதாக கூறி இப்போது தேர்தல் சமயம் என்பதால், படத்திற்கு சான்றிதழ் கொடுப்பது பற்றி தேர்தல் ஆணையத்திடம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் கேட்டதாக கூறப்படுகிறது.
வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். 234 தொகுதிகளுக்கும் அண்மையில் வேட்பாளர்களை அறிவித்திருந்தார் விஜய். தேர்தல் முடிந்த பிறகு ஏப்ரல் மாதத்தின் இறுதியில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த விஜய் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய விஜய், "இந்த தேர்தலின் மிகப்பெரிய ஆயுதமாக ஜனநாயகன் திரைப்படம் மாறிவிடுமோ என கூட்டுச் சூழ்ச்சி செய்தனர். எனக்கு ஏற்பட்டுள்ள அநீதிக்கு உங்களோடு சேர்த்து எனக்கும் நியாயம், நீதி கேட்கவே நான் உங்களை நம்பி வந்திருக்கிறேன்.
எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கனு உங்ககிட்ட கேக்காம வேற யாருகிட்ட கேட்பேன்? எனக்கு அந்த உரிமை இருக்கு. நம்ம கடைசி படமான ஜனநாயகன் தேர்தலில் பெரிய ஆயுதமாக மாறிவிடுமோ என நினைத்துதான் கூட்டு சதி நடக்கிறது. உங்களுக்காக நியாயம் கேட்டு வந்த எனக்கும்தான் நியாயம் வேண்டும்" என விஜய் பேசியுள்ளார்.
"கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கொண்டு, அவர்கள் உங்கள் விஜய்யை எப்படியெலாம் எதிர்க்கிறார்கள் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. கரூர் சம்பவம் சூழ்ச்சி என பலர் சொல்வது போல, எனது கடைசிப் படமான ஜனநாயகன் படத்தை வெளியிட முடியாதது வரை.. அது நம் இருவருக்குமான நெருக்கமான உறவை இன்னும் வலுப்படுத்திவிட்டால். அந்தப் படம் இந்தத் தேர்தலில் ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாக மாறிவிட்டால். இதனால் இவையெல்லாம் கூட்டு சூழ்ச்சி" என்று பேசினார் விஜய்.
'ஜனநாயகன்' பட பிரச்சனை பற்றி விஜய் இதுவரை வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். தனது சொந்த பட பிரச்சனைக்கே குரல் கொடுக்காத விஜய், மக்கள் பிரச்சனைகளுக்கு எப்படி குரல் கொடுப்பார் என்று விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று திருச்சி பிரசாரத்தில் விஜய் முதல் முறையாக ஜனநாயகன் பட விவகாரம் குறித்து பேசியுள்ளார். எனினும், மத்திய தணிக்கை வாரியம் குறித்தோ, மத்திய பாஜக அரசு பற்றியோ எதுவும் விமர்சிக்காமல் கூட்டுச் சூழ்ச்சி என விமர்சித்துள்ளார் விஜய்.












Click it and Unblock the Notifications