“மக்கள் ஆணையிட்டால்” பிறகு.. 34 ஆண்டு கழித்து ஸ்டாலின் செய்யும் காரியம் - உடன்பிறப்புகள் வெயிட்டிங்
சென்னை: 1980 களில் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடரிலும் நடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 34 ஆண்டுகளுக்கு பிறகு விளம்பரம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 ஆம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது.
ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஏராளமான சர்வதேச வீரர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.
“மாநிலங்களை ஆண்ட இசைஞானி” - இளையராஜாவுக்கு மிட் நைட்டில் வாழ்த்து சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்
செஸ் ஒலிம்பியாட் விளம்பரம்
போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தில் அதற்கு ஏற்பாடும் விரைவாக நடந்து வருகின்றன. தமிழ்நாடு அரசின் நிதிப்பங்களிப்புடன் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ள இந்த போட்டியை பிரபலப்படுத்தும் பணிகளில் தமிழ்நாடு அரசு இறங்கி இருக்கிறது. இந்த போட்டியை மேலும் பிரபலமாக்கும் வகையில் விளம்பர படம் ஒன்றையும் தயாரிக்கிறது அரசு.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை
பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த விளம்பர படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நடிக்க இருக்கிறார். மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் படப்பிடிப்பு சென்னை நேப்பியர் பாலத்தில் நடைபெறுவதன் காரணமாக அங்கு போக்குவரத்து திருப்பி விடப்படுகிறது.
மு.க.ஸ்டாலினும் நடிப்பும்
மு.க.ஸ்டாலினுக்கு நடிப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த 1987 ஆம் ஆண்டு கார்த்திக், ராதாரவி ஆகியோருடன் இணைந்து ஒரே ரத்தம் என்ற திரைப்படத்தில் முதல்முறையாக நடித்தார் மு.க.ஸ்டாலின். கருணாநிதி திரைக்கதை எழுதிய இந்த திரைப்படத்தை இயக்குநர் ஸ்வர்னம் இயக்கி இருந்தார். திராவிட கொள்கைகளை பேசும் அந்த திரைப்படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.
சீரியலில் நடித்த ஸ்டாலின்
அதன் தொடர்ச்சியாக கடந்த 1988 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த 'மக்கள் ஆணையிட்டால் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார் மு.க.ஸ்டாலின். இதில் திமுக கொடியுடன் மு.க.ஸ்டாலின் வரும் 'ஆர அமர' என்ற பாடல் இன்று வரை திமுக கட்சி நிகழ்வுகளில் ஒலிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக குறிஞ்சி மலர் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் அரவிந்தன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் மு.க.ஸ்டாலின்.
Recommended Video
34 ஆண்டுகளுக்கு பின்
அதன் பின்னர் மு.க.ஸ்டாலினால் நடிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. 1989 ஆம் ஆண்டிலேயே அவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் கட்சி சார்ந்த பிரச்சார வீடியோக்கள், முதலமைச்சரான பிறகு கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களில் மட்டும் பேசிவிட்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 34 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்.