45 வருஷம் கழித்து.. கீழ்ப்பாக்கத்தில் நெகிழ்ச்சி.. வயிறார அசைவ சாப்பாடு.. சபாஷ் தமிழ்நாடு அரசு
சென்னை: சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அரசு சார்பில் சைவ உணவு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு 45 ஆண்டுகளுக்கு பிறகு வாரம் இருமுறை அசைவ உணவு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை கீழ்பாக்கத்தில் அரசு மனநல காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மனநல காப்பகத்தில் முதலில் சைவம், அசைவம் என்று இரு வகையான உணவுகள் பரிமாறப்பட்டு வந்தன.

ஆனால் மனநல சிகிச்சையில் உள்ளவர்களுக்கு அசைவ உணவு சாப்பிட தெரியவில்லை. எலும்புகளை அப்படியே சிலர் விழுங்கினர். இதையடுத்து அங்கு சிகிச்சை பெறுவோரின் பாதுகாப்பு கருதி அசைவ உணவு வழங்குவது நிறுத்தப்பட்டது.
அதாவது கடந்த 1980 ம் ஆண்டு முதல் சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அசைவ உணவு என்பது வழங்கப்படவில்லை. சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது அங்கு மொத்தம் 772 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் தான் தற்போது தமிழக அரசு 45 ஆண்டு கால நடைமுறையை மாற்றி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு வாரம் இருமுறை புதன் மற்றும் சனிக்கிழமை என்று 2 நாட்கள் அசைவ உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது 772 பேர் சிகிச்சையில் இருக்கும் நிலையில் அவர்களில் 50 பேர் சைவ பிரியர்கள். இவர்கள் அசைவம் சாப்பிடுவது இல்லை. இதனால் இந்த 50 பேரை தவிர்த்து மீதமள்ள 722 பேருக்கு வாரத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவு வழங்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக அரசு மனநல காப்பகத்தின் இயக்குநர் டாக்டர் மாலையப்பன் கூறுகையில், ‛‛இங்கு 770 நோயாளிகள் உள்ளனர். சில வாரங்கள் முதல் சில ஆண்டுகள் தங்கி இருக்கும் நோயாளிகள் உள்ளனர். அவர்களுக்கு மூன்று வேளையும் சரிவிகித உணவு வழங்கப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அசைவ உணவு வழங்கப்பட்டது. சில காரணங்களுக்காக 1980 களில் அசைவ உணவு நிறுத்தப்பட்டது.
அப்போது எலும்பு கறி சேர்ந்து கொடுக்கப்பட்டது. அப்போது தீவிர நோய் பாதிப்பு உள்ளவர்களின் தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அசைவ உணவு ரத்து செய்யப்பட்டது. தற்போது எங்கள் துறை செயலாளர் வந்து ஆய்வு செய்தபோது நோயாளிகள் அசைவ உணவு சாப்பிட என்று கூறினர். அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி எலும்பு இல்லாத கறி பயன்படுத்தும் அசைவ உணவு வாரத்தில் புதன், சனிக்கிழமை என 2 நாட்கள் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக கடந்த திங்கட்கிழமை மதியம் அசைவ உணவு என்பது வழங்கப்பட்டது'' என்றார்.












Click it and Unblock the Notifications