''கூட்டணி அறத்தைக் காத்த தலைவர்'' - முதல்வரைப் புகழ்ந்த கூட்டணி கட்சித் தலைவர்கள்
சென்னை: நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி இருந்த இடத்தில் திமுகவினர் வெற்றி பெற்றதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இதற்கு திமுகவின் கூட்டணி கட்சிகள் பாராட்டு தெரிவித்துள்ளன.
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள். தமிழத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சியும் திமுக வசம் வந்தது. இந்த தேர்தலில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருந்தது திமுக.
கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மாநகராட்சிக்கு ஒதுக்கியது திமுக. அதேபோல, நகராட்சித் தலைவர் பேரூராட்சித் தலைவர் நகராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை தங்களின் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலின் போது கட்சித்தலைமை அறிவிப்பை மீறி ஏராளமான இடங்களில் திமுகவினர், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக போட்டியிட்டு தலைவர் துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை கைப்பற்றி வருகின்றனர். இதனால் கூட்டணிக்கட்சிகளின் தலைவர்கள் அதிருப்தியில் அறிக்கைகளை வெளியிட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கூட்டணி தர்மத்தைக் காக்க வேண்டும் என்று தன்னுடைய ட்விட்டரி, முதல்வர் மு.க.ஸ்டாலினைக் குறிப்பிட்டு பதிவிட்டார்.
இந்நிலையில், மறைமுகத் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. கட்சி சொன்னதை மீறி வெற்றி பெற்றவர்கள், ராஜினாமா செய்துவிட்டு என்னை வந்து பாருங்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இதுதான் நம் கோட்பாடு, அதில் கட்டுப்பாடு ரொம்ப முக்கியம் என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதையடுத்து, முதல்வரின் இந்த செயலைப் பாராட்டி கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேச்சியில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில், ''முதல்வரின் அறிக்கை நம்பிக்கையை தருகிறது. கூட்டணி அறத்தை பாதுகாக்க வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்துக்கு நன்றி. திமுகவுக்கு எப்போதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும்'' என்று தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், ''கூட்டணி தர்மத்தை காத்த முதல்வரின் செயலை வரவேற்கிறேன். முதல்வரின் முடிவை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications