டெல்லிக்கு புறப்பட்ட ஜனாதிபதி திரௌபதி முர்மு.. ‘ஸ்பெஷல் பரிசு’ வழங்கி வழியனுப்பிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி பயணத்தை நிறைவு செய்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் ஜனாதிபதியை வழியனுப்பி வைத்தனர்.
குடியரசுத் திரெளபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழ்நாடு, புதுச்சேரிக்கு வருகை தந்தார். தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் சரணாலயத்துக்கு வருகை தந்து, முதுமலை புலிகள் காப்பகத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, அதன்பிறகு யானை பாகன்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து ‛ஆஸ்கர்' வென்ற எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பாகன் தம்பதிகளான பொம்மன்- பெள்ளியை அவர் சந்தித்து பாராட்டினார்.

அதன்பிறகு மாலை 5 மணிக்கு ஹெலிகாப்டரில் மைசூரூக்கு புறப்பட்டு சென்றார். மைசூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். இரவு 7 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த ஜனாதிபதி திரெளபதி முர்முவை முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்என் ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். அன்று இரவு ஆளுநர் மாளிகையில் ஓய்வு எடுத்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.
அடுத்த நாள் காலை சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு. இந்த விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அன்று மதியம் 3.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பழங்குடியின பிரதிநிதிகளின் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றார் ஜனாதிபதி முர்மு.
அதைத் தொடர்ந்து, மாலையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பாரதியார் படத் திறப்பு விழாவில் பங்கேற்று ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கத்திற்கு பாரதியார் பெயரைச் சூட்டி, அதற்கான பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்றார். முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.
அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாகச் சென்றார். அவரை புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பூ கொத்து கொடுத்து வரவேற்றனர். புதுச்சேரியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்றார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் டெல்லி செல்வதற்காக இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி இன்று மாலை சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். விமான நிலையத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் ஜனாதிபதியை வழியனுப்பி வைத்தனர்.
ஜனாதிபதியை வழியனுப்பி வைக்க வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு கீழடி வரலாறு மற்றும் அகழ்வாய்வு குறித்து ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட காலப்பேழை (Coffee Table) புத்தகத்தை வழங்கி வழியனுப்பி வைத்தார்.
முன்னதாக, ஜனாதிபதி திரௌபதி முர்முவை வரவேற்றபோது ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications