சர்ச்சையை கிளப்பிய கருப்பு துப்பட்டா சம்பவம்.. முதல்வர் விழாவில் நடந்தது என்ன? காவல்துறை விளக்கம்
சென்னை: சென்னை எழும்பூரில் நடந்த அரசு விழாவில், அனுமதிக்கப்பட்ட நபர்களை தணிக்கை செய்து அனுப்பும் போது, கருப்பு துப்பட்டா அணிந்து வந்தவரிடம், கருப்பு துப்பட்டாவை வாங்கி வைத்தனர் என்றும், இந்நடவடிக்கை அங்கு பணியிலிருந்த காவல் ஆளிநர்கள் தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் நிகழ்ந்தது என்றும் சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுப்பிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகக் கலையரங்கில் இன்று தொடங்கியது. இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று காலையில் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாணவ-மாணவிகள் பலரும் வருகை தந்து இருந்தனர். அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாணவிகள், கருப்பு நிறத்திலான துப்பட்டா அணிந்து இருந்ததால் அவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.
கருப்பு நிற உடை அணிந்து செல்ல அனுமதியில்லை என்று கூறி அவர்களை வெளியே நிறுத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகள், கருப்பு நிற துப்பட்டாவை அணிந்து வந்த மாணவிகளிடம் 'கருப்பு நிற உடை அணியக்கூடாது' என்று கூறி அவற்றை வாங்கி வைத்துள்ளனர்.
இதன் பின்னர், மாணவிகள் கருப்பு நிற துப்பட்டாவை கழற்றி வெளியே வைத்துவிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், சென்னை காவல்துறை, அங்கு பணியிலிருந்த காவல் ஆளிநர்கள் தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் நிகழ்ந்தது என்று விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை காவல்துறையினர் அளித்துள்ள விளக்க கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
இன்று (05.01.2025) எழும்பூர் பகுதியில் நடைபெற்ற அரசு விழா நிகழ்வின் போது சென்னை பெருநகர காவல், பாதுகாப்பு சென்னை காவல் (SCP) பிரிவினர் விழா நடக்கும் உள் அரங்கிற்குள், அனுமதிக்கப்பட்ட நபர்களை தணிக்கை செய்து அனுப்பும் போது, கருப்பு துப்பட்டா அணிந்து வந்தவரிடம், கருப்பு துப்பட்டாவை வாங்கி வைத்தனர்.
இந்நடவடிக்கை அங்கு பணியிலிருந்த காவல் ஆளிநர்கள் தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் நிகழ்ந்தது தெரியவருகிறது. இனி அவ்வாறு நிகழாவண்ணம் இருப்பதற்கு பாதுகாப்பு சென்னை காவல் பிரிவிற்கு (SCP) தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications