பெரியாரை விமர்சித்ததும் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் போலி என்கிறார்கள்.. சீமான் ஆவேசம்!
சென்னை: பெரியார் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை பேசி வருகிறார். ஏற்கனவே இவர் மீது பெரியார் தொடர்பான பேச்சிற்கு வழக்குப்பதிவு செய்த நிலையில், இன்று பெரியாரிய அமைப்புகள் சீமானின் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். இதனிடையே சீமான் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் போலி என்ற சர்ச்சை உருவானது.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசுகையில், எத்தனை பேர் தான் அந்த புகைப்படத்தை எடிட் செய்தார்கள். பெரிய எடிட்டரா நீங்கள் எல்லாம்.. காமெடி செய்து கொண்டிருக்காதீர்கள். 15 ஆண்டுகளாக எங்கு இருந்தீர்கள்.. அந்த புகைப்படம் முதல்முறையாக வெளியான போதே சொல்ல வேண்டியது தானே..

பெரியார் மீது விமர்சனம் வைத்த பின், பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் பொய் என்று வருகிறார்கள். பெரியாரா, பிரபாகரனா என்று மோதி பார்ப்போம் என்று ஆகிவிட்டது. பெரியாரை விமர்சித்ததற்கு திராவிடர் கழகமே அமைதியாக இருக்கிறது. மற்ற அமைப்புகள் தான் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். கி.வீரமணியை பதில் சொல்ல சொல்லுங்கள்.
கொளத்தூர் மணி என்பவர் மதிக்கும் பெரிய மனிதர். நான் நாதக கட்சிப் பெயரை சோ.ராமசாமியையும், குருமூர்த்தியையும் அழைத்து சென்று ஆதித்தனார் காலில் விழுந்து வாங்கி வந்தேன் என்கிறார்கள். பொய்யை தவிர வேறு எதுவும் கிடையாது. நாம் தமிழர் என்ற பெயர் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. சோவுக்கும், குருமூர்த்திக்கும் நாதகவுக்கும் என்ன சம்மந்தம் உள்ளது.
நாம் தமிழர் என்ற கட்சிப் பெயரை சோ, குருமூர்த்தி வாங்கி கொடுத்ததற்கான ஆதாரம் என்ன உள்ளது. பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர். தமிழ் முட்டாள்களின் மொழி, தமிழ் சனியன், தமிழில் என்ன இருக்கிறது என்று பேசி இருக்கிறார். என் நிலத்தில் பெரியார் யார்.. நீங்கள் கன்னடன். கர்நாடகா நாட்டில் பிறந்தவர். அவர் என் நிலத்தில் அமர்ந்து தமிழை கொச்சைப்படுத்துவதா..
தமிழன் மட்டும் தான் சூத்திரன் என்று சமஸ்கிருதத்தில் எழுதி இருக்கிறதா.. பெரியார் தொடர்பாக இன்னும் முழுமையாக பேசவே தொடங்கவில்லை. அதற்குள் அலறுகிறார்கள்.. பெரியாரால் தமிழ், தமிழருக்கு நடந்த ஒரு நன்மையை சொல்லுங்கள். பெரியார் குறித்த எனது கருத்துக்கு நீதிமன்றத்தில் வழக்கு வந்தால், அங்கு பதிலளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications