மக்களவையில் அதிமுக “பூஜ்ஜியம்”.. ஓபிஎஸ் மகனை நீக்கியதால் பரிதாபம்! அடடே எப்படி இருந்த கட்சி!
சென்னை: அதிமுகவிலிருந்து தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் ஓ.பன்னீர்செல்வம் மகனுமான ரவீந்திரநாத்தை கட்சியிலிருந்து நீக்கியதால் அக்கட்சிக்கு நாடாளுமன்ற மக்களவையில் ஒரு எம்.பி கூட இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
ஓ.பி.எஸ். தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகளை கடந்து 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.
ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டார். அத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சிறப்பு தீர்மானம் போட்டு நீக்கப்பட்டனர்.

18 பேர் நீக்கம்
இந்த நிலையில் மேலும் 18 பேரை கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஓ.பி.எஸ். மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.என்.பி.வெங்கட்ராமன், ஆர்.டி.ராமச்சந்திரன், எம்.ஜி.எம்.சுப்பிரமணியன், ஓம் சக்தி சேகர், கோவை செல்வராஜ், முன்னாள் எம்.பிக்கள் கோபாலகிருஷ்ணன், சையதுகான் உள்ளிட்டோர் நீக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் மருது அழகுராஜ், வினுபாலன், அஞ்சுலட்சுமி, சைதை எம்.எம்.பாபு, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், வைரமுத்து, அசோகன் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளன.

எம்.பி.ரவீந்திரநாத்
அதிமுக உட்கட்சிப்பூசல் வெடித்த நேரத்திலும், அது பூதாகரமான சூழலிலும் அதுகுறித்து அதிகம் பேசாமல் இருந்தவர் ரவீந்திரநாத். பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டபோதிலும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உள்ள கவர் படத்தில் எடப்பாடி பழனிசாமியின் படத்தை அகற்றாமலேயே இருந்து வந்தார். கடந்த மே மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரவீந்திரநாத் பேசியது எடப்பாடி தரப்பை அதிருப்தி அடைய செய்ததாகவும் இதன் காரணமாகவே அவர் நீக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அதிமுகவின் பரிதாப நிலை
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக 18.5% வாக்குகளை பெற்று, ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்ட தேனி மக்களவைத் தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் தனித்து போட்டியிட்ட அதிமுக 44.44% வாக்குகளை பெற்று தருமபுரி, கன்னியாகுமரியை தவிர்த்து 37 சீட்களை வென்று நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால், இன்றோ உட்கட்சிப்பூசலால் ஒரு எம்பி கூட இல்லாத கட்சியாக மாறியுள்ளது அதிமுக.
எடப்பாடி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அளித்த புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவை பொறுத்து இந்த நிலை மாறலாம்.












Click it and Unblock the Notifications