மருத்துவமனையில் வார்டுபாயாக மாறிய யூடியூபர்! சென்னையில் பைக் சாகசத்தால் பாடம் புகட்டிய நீதிமன்றம்
சென்னை: சென்னையில் பைக் ஸ்டண்ட் செய்ததாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 22 வயது யூடியூபர் அலெக்ஸ் பினோய், நீதிமன்ற உத்தரவுப்படி தேனாம்பேட்டை சிக்னலில் போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும் எனக்கூறி விழிப்புணர்வு செய்து துண்பு பிரசுரங்கள் வினியோகித்தார். மேலும், இன்று முதல் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வார்டு பாய் பணியாற்ற துவங்கி உள்ளார்.
தற்போது கிராமங்கள் முதல் பெரு நகரங்கள் வரை இளைஞர்கள் விலையுயர்ந்த பைக்குகளை வாங்கி விபத்து ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து விதிகளை மீறி வீலிங் உள்ளிட்ட சாகசங்களை செய்து வருகின்றனர்.
இத்தகைய சாகசங்கள் அவர்களின் உயிருக்கு மட்டுமின்றி சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகள், பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

சென்னையில் சாகசம்
இந்நிலையில் தான் சென்னை சென்னை அண்ணா சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இரவில் ஒருவர் பைக்கில் சாகசம் செய்தார். இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியானது. இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் னெ பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

ஐதராபாத் இளைஞர்
சென்னை பாண்டிபஜார் போலீசார் நடத்திய விசாரணையில் பைக்கில் சாகசம் செய்த நபர் ஐதராபாத்தை சேர்ந்த 22 வயது நிரம்பிய அலெக்ஸ் பினோய் என்பது தெரியவந்தது. மேலும் அவர் சென்னை கடந்த மாதம் 8ம் தேதி சென்னை அண்ணா சாலை, தேனாம்பேட்டை சிக்னலில் சாகசம் செய்தது தெரியவந்தது. மேலும் அவர் யூடியூப்பில் வீடியோ பதிவிட்டு வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்
இதுபற்றி அறிந்த அலெக்ஸ் பினோய் சென்னை உயர்நீதிமன்றத்த்தில் முன்ஜாமீன் கோரினார். மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியது. அதன்படி நிபந்தனைகளாக 3 வாரத்துக்கு வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை காலை மாலையில் சென்னை தேனாம்பேட்டையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும், செவ்வாய் முதல் சனிக்கிழமை வரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் வார்டுபாயாக பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் போக்குவரத்து விழிப்புணர்வுக்கான துண்டு பிரசுரங்களை சொந்த செலவில் அச்சிட்டு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியது.

போக்குவரத்து விழிப்புணர்வு பிரசாரம்
இந்நிலையில் முன்ஜாமீன் பெற்ற பினோய், நீதிமன்ற நிபந்தனைபடி பைக் சாகசத்தில் ஈடுபட்ட அதே தேனாம்பேட்டை சிக்னல் மற்றும் மவுண்ட் ரோடு சந்திப்பில் நேற்று காலை, மாலையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது என எழுதிய பதாகையை கையில் ஏந்தியும், போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும், குடிபோதையில் வாகனம் ஒட்டுதல் கூடாது, சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது தொடர்பான துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு கொடுத்தும் அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

வார்டுபாய் பணி
இதையடுத்து அலெக்ஸ் பினோய் இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள வார்டில் வார்டு பாய் பணியை தொடங்கினார். இன்று காலை அவர் வார்டுபாய் பணியை துவங்கினார். இன்று முதல் சனிக்கிழமை வரை 3 வாரம் வார்டுபாய் பணியை அவர் செய்ய உள்ளார். அதன்பிறகு பணி தொடர்பான தனது அனுபவத்தை அவர் அறிக்கையைாக டூட்டி டாக்டரிடம் வழங்குவார். இந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications