திமுக 'கஜானாவிலேயே' கை வைத்த வருமான வரித் துறை.. அரசியலின் அடுத்த பரபரப்பு
Recommended Video

சென்னை: திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மற்றும் அவரது கல்வி நிறுவனங்களில் நடத்தப்பட்டு வரும் வருமான வரித்துறை சோதனை அரசியல் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.
திமுக பொருளாளர் துரைமுருகனின் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வீடு, கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, மற்றும் பி எட் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் இன்று அதிகாலை 3 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் வந்த அதிகாரிகள், வருமானவரித் துறையில் இருந்துதான் வந்துள்ளனரா அல்லது தேர்தல் பறக்கும் படையினரா என்பதில் கூட பெரும் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

முக்கிய கட்சி
தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரும் கட்சிகளின் தலைமைகளில் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி அமைந்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு பெரிய கட்சியின் நிர்வாகி, அதிலும் பொருளாளர் ஒருவரின் வீட்டிலேயே வருமானவரித்துறை சோதனை நடத்துவது என்பது கண்டிப்பாக அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கும் விதை தூவி உள்ளது.

நிதி விவகாரங்கள்
ஒரு கட்சியின் பொருளாளர் பதவி என்பது அக்கட்சியின் நிதி விவகாரங்கள், கணக்கு வழக்குகள், உள்ளிட்ட நிதி அம்சங்களை சார்ந்து பொறுப்பு வகிக்க கூடிய ஒரு பதவி. வருமானவரித்துறை என்பதும் நிதி விவகாரங்கள் ஆய்வு செய்யக் கூடிய ஒரு துறை. எனவே இந்த சோதனை என்பது நேரடியாக திமுகவின் கஜானா மீதான சோதனையாக சில அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

பணிகள் பாதிப்பு
தேர்தல் காலங்களில் அப்பணிகளுக்காக பல்வேறு வகையில் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை வரும். ஆனால் இதுபோன்ற வருமானவரித்துறை சோதனை நடக்கும் போது, பணத்தை செலவிடுவது முடக்கி வைக்கப்படுவதால் அந்தக் கட்சிக்கு அது பின்னடைவாக பார்க்கப்படும். மேலும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுபவர்கள், தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லமுடியாமல் வருமான வரித்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டு காலத்தை செலவிடும் சூழ்நிலை உருவாகும். இவை அனைத்துமே சம்பந்தப்பட்ட கட்சியினருக்கு தான் பின்னடைவு என்பதால், இந்த வருமான வரி சோதனை, அதிலும் குறிப்பாக தேர்தல் காலங்களில் நடைபெறும் ஐடி ரெய்டுகள், அரசியல் உள்நோக்கம் கற்பிக்கப்படுவது இயல்பான ஒன்றுதான்.

கர்நாடகாவிலும் இதேபோல சோதனை
இரு தினங்களுக்கு முன்பாக கர்நாடக அமைச்சர் புட்டராஜு வீடு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதேபோல அம்மாநிலத்தின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் ஒரே நேரத்தில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. அரசியல் ரீதியாக தங்களை பாஜக பழிவாங்குவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி நேரடியாகவே குற்றம் சாட்டினார். இதுபோன்ற சோதனைகள் ஏன் பாஜக பிரமுகர்கள் இல்லங்களில் நடப்பதில்லை என்று குமாரசாமி எழுப்பிய கேள்வி தமிழகத்திலும் எதிரொலித்துக் கொண்டு உள்ளது.

அரசியல் பார்வையாளர்கள் கருத்து
வலுவான கூட்டணி எங்கெல்லாம் அமைந்துள்ளதோ, அங்கெல்லாம் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறதா என்று ஐயப்பாட்டையும் இது எழுப்புகிறது. ஏனெனில் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி, வாக்கு சதவீத அடிப்படையில் மிகவும் வலுவான கூட்டணியாக காணப்படுகிறது. அதே போன்று தமிழகத்திலும் திமுக கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும் என்று உளவுத்துறை சமீபத்தில் ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

பணத்தை கண்டுபிடிக்கிறோம்
இந்த நிலையில் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் எதிர்க் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் வீடுகளில் நடைபெறும் வருமான வரி சோதனை அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று எளிதாக புறந்தள்ளிவிட முடியாது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆனால் தேர்தல் காலங்களில் வெள்ளமென பாய்ந்தோடும் பணத்தையும், அதன் மூலத்தையும் கண்டறிவதற்காகத்தான் இந்த சோதனை நடத்தப்படுகிறதே தவிர, இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications