என்ட்ரி கொடுத்த எடப்பாடி! அதிமுக கூட்டணிக்கு வந்த பாமக? அசைன்மென்டை முடித்த அன்புமணி! அப்போ ராமதாஸ்?
சென்னை: கரூர் விவகாரத்திற்கு பிறகு தமிழக அரசியலில் விஜய் மீதான எதிர்பார்ப்பும் கூட்டணி கணக்குகளும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க, சத்தமில்லாமல் பாமகவுடன் கூட்டணியை இறுதி செய்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று பேசிய நிலையில் கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தந்தை மகன் இடையேயான மோதலும் விரைவில் முடிவுக்கு வரும் என்கின்றனர் பாமகவினர்.
தமிழக அரசியல் களம் சற்றே சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. 2026 தேர்தலுக்கு இன்னும் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் இருக்கும் நிலையில் கூட்டணியை இறுதி செய்ய கட்சித் தலைவர்கள் தீவிரமாகக் காய் நகர்த்தி வருகின்றனர்.
திமுக கூட்டணி ஏற்கனவே பலம் வாய்ந்ததாக இருக்கிறது. பெரும்பாலான கட்சிகள் அதே கூட்டணியில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணியில் அதிக சீட்டுகள் வேண்டுமென காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பேசி வருகின்றன.

பாமக கூட்டணி
ஆனால் அது கூட்டணியில் பெரிய அளவில் பிளவை ஏற்படுத்தாது எனச் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக ஆளும்கட்சியாக வேண்டும் எனத் தீவிரமாகச் செயலாற்றி வருகிறது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுக பாஜக கூட்டணியை அமித்ஷா இறுதி செய்துவிட்டார். 2021ஐ போலவே 2026லும் பாஜக அதிமுக கூட்டணி அமைந்திருக்கிறது. மேலும் அந்த தேர்தலில் கூட்டணியிலிருந்து பாமகவை அழைத்து வர எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாகப் பேசி வருகிறார். தந்தை ராமதாஸ் மகன் அன்புமணி இடையே மோதல் வெடித்த நிலையில் இருதரப்பும் இரு துருவங்களாகச் செயல்பட்டு வந்தது.
அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸைப் பொருத்தவரை தனது சுற்றுப் பயணத்தில் திமுக அரசை மிகக் கடுமையாக சாடி வருகிறார். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் எனப் பேசி வரும் நிலையில் அவர் அதிமுகவுக்குத்தான் ஆதரவு அளிப்பார் என சொல்லப்பட்டது. அதிமுகவைப் பொறுத்தவரை அன்புமணி ராமதாஸ் தரப்புடன் மிகுந்த தொடர்பில் இருந்தது. கட்சியும் கட்சி சின்னம், கொடி ஆகியவை அன்புமணிக்கு தான் சொந்தம் என தேர்தல் ஆணையம் கூறியதாக தகவல் வெளியான நிலையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அன்புமணி ராமதாசை சந்தித்து பேசினார்.
பாமக கூட்டணி
தொடர்ந்து ராமதாசையும் சி.வி சண்முகம் சந்தித்து பேசிய நிலையில் இந்த கூட்டணி பேச்சு வார்த்தைகள் இறுதி அடைந்ததாக சொல்லப்பட்டது. அதே நேரத்தில் தந்தை மகன் ஒன்று சேர வேண்டும் எனவும் சண்முகம் தனது பேச்சில் வலியுறுத்தி இருந்தார். இதற்கிடையே முப்பது சட்டமன்ற தொகுதிகள், ஒரு மாநிலங்களவை சீட்டு ஆகியவற்றை பாமகவுக்கு தர அதிமுக ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையே விஜயுடனும் கூட்டணி பேச்சு வார்த்தைகளை அதிமுக நடத்தி வரும் நிலையில் அதிமுக-பாமக - தவெக கூட்டணி அமையலாம் எனவும் சொல்லப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி
இப்படியாக அடுத்தடுத்து கூட்டணி பேச்சு வார்த்தைகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் ராமதாசை சந்தித்து பேசினர். மற்றவர்களை விட எடப்பாடி பழனிச்சாமி உடன் ராமதாஸ் மகிழ்ச்சியுடன் உரையாடினார். இதனால் அதிமுக பாமக கூட்டணி உறுதியாகிவிட்டது எனவும் ராமதாஸ், அன்புமணி ராமதாசும் சந்தித்து பேசுவது மட்டும்தான் மிச்சம் இருக்கிறது என்கின்றனர் பாமகவினர்.












Click it and Unblock the Notifications