ரூ.786 கோடி நஷ்டம்.. சென்னையில் அம்மா உணவகங்கள் மூடப்படுமா? மாநகராட்சி மேயர் பிரியா சொன்ன பதில்!
சென்னை: சென்னை மாநகராட்சியில் ரூ.786 கோடி நஷ்டத்தில் அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன எனவும். நாள் ஒன்றுக்கு ரூ.500க்கும் குறைவான வருமானம் கொண்ட அம்மா உணவகங்களை மூட வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அம்மா உணவகம் மூடப்படுமா? இல்லையா? என்பது பற்றி மேயர் பிரியா பதிலளித்து பேசினார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் மலிவு விலையில் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் வகையில் அம்மா உணவகம் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் இந்த அம்மா உணவகம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அம்மா உணவகம்
அம்மா உணவகத்தில் குறைந்த விலையில் உணவுகள் விற்பனை செய்யப்படுவதால் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். சென்னை, கோவை உள்பட பெரிய நகரங்களில் வேலை தேடி செல்லும் இளைஞர்களும் அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்டு வருகின்றனர். மேலும் வடமாநில தொழிலாளர்களுக்கும் இந்த உணவகத்தை அதிகமாக பயன்படுத்தி வந்தனர்.

மூட திமுக முயற்சி என குற்றச்சாட்டு
சென்னையை பொறுத்தமட்டில் 400க்கும் அதிகமான அம்மா உணவகங்கள் உள்ளன. சென்னை மாநகராட்சியில் வார்டு வாரியாக அம்மா உணவகங்கள் உள்ளன. இந்நிலையில் தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததால் திமுக ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் தான் அம்மா உணவகத்தை மூடும் நோக்கத்தில் திமுக அரசு சதித்திட்டம் தீட்டி செயல்பட்டு வருவதாக தொடர்ந்து அதிமுக தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் விவாதம்
இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் பிரியா தலைமையில் இந்த கூட்டத்தில் துவங்கியது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங், அதிகாரிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அம்மா உணவகம் பற்றிய விவாதம் நடந்தது.

ரூ.786 கோடி நஷ்டம்
மாநகராட்சி கூட்டத்தின் கேள்வி நேரத்தின்போது மாநகராட்சி கணக்கு குழு தலைவர் தனசேகரன் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். அதாவது ‛‛சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகங்கள் ரூ.786 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. தினசரி வருமானமாக ரூ.500க்கு கீழ் இயங்கும் அம்மா உணவகங்கள் மூடப்படுமா'' என கேள்வி எழுப்பி இருந்தார்.

மேயர் பிரியா பதில்
இந்த கேள்விக்கு மேயர் பிரியா பதில் அளித்து பேசினார். அப்போது ‛‛சென்னையில் அம்மா உணவகம் எப்போதும் போல் செயல்படும். ஏதேனும் குறிப்பிட்ட உணவகங்களில் உள்ள பிரச்சனைகள், வருமானம் குறைவு பற்றி ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வை தொடர்ந்து பரிசீலனை செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்றார். இதன்மூலம் சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் மூடப்படாது என மேயர் பிரியா உறுதியளித்துள்ளார்.

ஊழியர்கள் பணியமர்த்த..
மேலும், ‛‛அம்மா உணவகத்தில் கவுன்சிலர்கள் பரிந்துரை செய்யும் ஊழியர்களை பணியமர்த்த வேண்டும்'' என கவுன்சிலர் ராஜா அன்பழகன் கூறினார். இதற்கு மேயர் பிரியா, ‛‛கவுன்சிலர்கள் பரிந்துரை செய்யும் ஊழியர்களுக்கு வேலை வழங்க அனுமதி வழங்கப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications