நேராக பெரியார் திடலுக்குச் சென்ற முதலமைச்சர் விஜய்.. காலணியை கழற்றிவிட்டு மரியாதை
சென்னை: தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்ற நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் மரியாதை செலுத்தினார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்து வாழ்த்தும் பெற்றார்.
தமிழகத்தின் 13வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று காலை பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து தலைமை செயலகம் வந்த முதலமைச்சர் விஜய் முறையாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் சென்னை எழும்பூர் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்குச் சென்றார். அவர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை சந்தித்தார். பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கொள்கைத் தலைவருக்கு புகழ் வணக்கம் என்ற கோஷங்கள் முழங்க, தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் விஜய்.
பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்கு முன்னதாக தனது காலணியை கழற்றிவிட்டார் முதலமைச்சர் விஜய். முதல்வர் விஜய்யுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி பூங்கொடுத்து கொடுத்தார். பதிலுக்கு கி.வீரமணியும் முதலமைச்சர் விஜய்க்கும் பொன்னாடை போர்த்தி புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார்.
இதனை தொடர்ந்து சிறிது நேரம், கி.வீரமணியுடன் முதலமைச்சர் விஜய் கலந்துரையாடினார். பெரியார் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். இதன்பின், பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.












Click it and Unblock the Notifications