பாஜகவே அண்ணாமலை கட்டுப்பாட்டில் இல்லை போலயே.. சீண்டிய மாஜி.. மீண்டும் புகையும் கூட்டணி! தலை சொன்னது?
சென்னை : அதிமுக - பாஜக இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து வந்த நிலையில், டெல்லியில் அமித் ஷாவே அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிசாமி டீமை அமர வைத்து சமரசம் பேசிய நிலையில், மீண்டும் அதிமுக - பாஜகவினர் இடையே சீண்டல்கள் தீவிரமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை அண்மையில் டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடனிருந்தார். அதிமுக - பாஜக இடையிலான மோதல் தொடர் கதையாகி வந்த நிலையில், டெல்லியில் அமித் ஷா இருவருக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தி வைத்ததாக தகவல் வெளியானது.

பேச்சில் மாற்றம் : அண்ணாமலை பற்றி எங்களுக்கு கவலையில்லை, நாங்கள் டெல்லி தலைமையுடன் தான் கூட்டணி பேச்சுவாரத்தை நடத்துவோம், முதிர்ச்சியற்ற தலைவரை பற்றியெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் என்று ஆக்ரோஷமாக பேசி வந்த எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்று வந்ததும் எங்களுக்குள் பிரச்சனை எதுவும் இல்லை என்று தெரிவித்தார். அதேபோல அண்ணாமலையும், எனக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே எந்த தகராறும் இல்லை என்றார்.
இந்நிலையில் பாஜக மாநில பொருளாளர் எஸ். ஆர்.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், மலைக்கு சமம் இல்லை என்பதால் ஆறு தலைகளுடன் நடந்த கூட்டம். தமிழ்நாட்டில் எந்த முடிவையும் அண்ணாமலையே எடுப்பார் என்றும் அவர் இல்லாமல் டெல்லி தனியாக முடிவெடுக்காது என்பதை ஆறாக உடைந்து போன அதிமுகவுக்கு அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியோர் உணர்த்தியிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம் : இது அதிமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாகப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக நிர்வாகிகள் அதிமுக குறித்து விமர்சிப்பதற்கு அண்ணாமலை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், பாஜக வினையாற்றினால் எதிர்வினையாற்ற அதிமுக தயாராக இருக்கிறது. அதில் மாறுபட்ட கருத்தே இல்லை, எங்களுக்கும் பதிலடி கொடுக்கத் தெரியும் என்று தெரிவித்தார்.
அமித் ஷா இரு தரப்பையும் சமாதானம் செய்து, இனி மாறி மாறி விமர்சிக்கக்கூடாது என்றும், தேர்தல் பணிகளில் இரு கட்சியினரும் இணைந்து ஈடுபடுமாறும், திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தியிருந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களிலேயே அதிமுக - பாஜக இடையே ஏற்பட்ட இந்தச் சீண்டல்கள் சலசலப்பை ஏற்படுத்தின.
அண்ணாமலை கட்டுப்பாட்டில் இல்லையா? : இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர், அதிமுக தலைமை குறித்து பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விமர்சித்தது குறித்த கேள்விக்கு, "பாஜகவினரின் விமர்சனங்களுக்கு அதிமுகவினருக்கும் பதிலடி கொடுக்கத் தெரியும். வேண்டாம் என அடக்கி வைத்துள்ளோம். இதுபோன்ற விமர்சனங்கள் பாஜகவினர் அண்ணாமலையின் கட்டுப்பாட்டில் இல்லாததையே காட்டுகிறது.
இவை எல்லாம் அண்ணாமலை சொல்லி நடக்கிறதா இல்லையா என்பதை அண்ணாமலை ஊடகங்கள் முன்னிலையில் தெளிவுப்படுத்த வேண்டும். அப்படிச் சொன்னால் தான் அண்ணாமலை மீது சந்தேகம் இருக்காது. இல்லையென்றால் அண்ணாமலை சொல்லித்தான் அவரது கட்சியினர் செய்கிறார்கள் என நினைக்க வேண்டி வரும்" என ஜெயக்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications