சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்.. பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன? அமைச்சர் விளக்கம்
சென்னை: சாம்சங் இந்தியா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25 நாட்களாக போராடி வரும் நிலையில் இன்று அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினர் உடன்பாட்டுக்கு வந்து கையெழுத்திட்டுள்ளனர் என்று அமைச்சர் தா மோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி. உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் கடந்த மாதம் தொடக்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சிஐடியுவை தொடங்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு தொழிற்சாலை நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இதனால், கடந்த 9-ந் தேதி முதல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 1,800 பேர் நிரந்தர தொழிலாளர்களில் 1,200 பேர் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தினால், சாம்சங் இந்தியா நிறுவனத்தில் பொருட்கள் உற்பத்தி 60 % குறைந்ததாக கூறப்படுகிறது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, தமிழக அரசின் தொழில் துறை, தொழிலாளர் நலத்துறையை சேர்ந்த அதிகாரிகள் சாம்சங் இந்தியா நிறுவனத்துடனும், தொழிற்சங்க நிர்வாகிகளுடனும் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இதுவரை 5 முறை பேச்சு வார்த்தை நடைபெற்றும் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில், ஒரு மாத காலமாக போராட்டம் நீடித்து வரும் நிலையில், சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தீர்வு காண அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இதன்படி, இன்று 6 வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில், தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு தொழிலாளர்கள் மற்றும் ஆலை நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை சிஐடியூ தொழிற்சங்கம் மறுத்து இருந்தது.
இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர் தாமோ அன்பரசன் செய்தியாளர்களுக்கு பேடி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களில் ஒரு தரப்பினர் உடன்பாட்டுக்கு வந்து கையெழுத்திட்டுள்ளனர். மற்றொரு தரப்பினர் போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்துள்ளனர். அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதே அரசின் கோரிக்கையாகும். சாம்ங்சங் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கும் விவகாரம் நீதிமன்றத்தில் வழக்காக உள்ளது. அதனை இங்கு விவாதிக்க முடியாது" என்றார்.












Click it and Unblock the Notifications