இனிமேல் விவசாயிகளிடம் இப்படி செய்யக் கூடாது! உரிமம் ரத்தாகும்! உரக்கடைகளுக்கு அரசு எச்சரிக்கை!
சென்னை: உர விற்பனையாளர்கள் விவசாயிகள் கேட்கும் மானிய உரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.
இதர இடுபொருட்களை விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக மானிய உரம் திட்டத்தில் கட்டாயப்படுத்தி விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என உர விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அரசு செய்திக்குறிப்பில்;

மானிய உரங்கள்
தமிழ்நாட்டிற்குப் பயிர் சாகுபடிக்குத் தேவைப்படும் மானிய உரங்களான யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு சில்லறை உர விற்பனையாளர்கள் வாயிலாக நேரடி பயன் பரிமாற்றம் (DBT -Direct Benefit Transfer) வழிகாட்டுதல் முறைகளை பின்பற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கட்டாயம் செய்து
மானிய உரங்களை விற்கும் சமயம், சில உர விற்பனையாளர்கள் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக இதர இடுபொருட்களையும், வாங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தி விற்பனை செய்கின்றனர். இதனால், விவசாயிகள் கூடுதலாக செலவு செய்யும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

கடும் எச்சரிக்கை
உர விற்பனையாளர்கள் விவசாயிகள் கேட்கும் மானிய உரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதர இடுபொருட்களை விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது. எனவே, இத்தகைய விற்பனை, உரக்கட்டுப்பாட்டு ஆணை, 1985 -ற்கு புறம்பான செயலாகும்.

உரிமம் ரத்தாகும்
விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக இதர இடுபொருட்களை வலுக்கட்டாயமாக விற்பனை செய்யும் உர விற்பனையாளர்களின் விற்பனை உரிமங்கள் இரத்து செய்யப்படும் என எச்சரிக்கை செய்யப்படுகிறது. இதுபோன்ற விதிமீறல்கள் செய்யும் உர விற்பனையாளர்கள் குறித்த புகார்களை மாநில உர உதவி மைய கைப்பேசி எண். 93634 40360 மற்றும் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநரிடம் தெரிவிக்கும்படி வேளாண் பெருங்குடி மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications