மட்டன் வாசம்.. தமிழ்நாடெங்கும் வீசும்! தீபாவளி அதுவுமா நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிய மக்கள்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆட்டுக்கறி வாங்குவதற்காக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கறிக்கடைகளில் நீண்ட வரிசையில் அதிகாலை முதல் காத்து நின்றனர்.
நாடு முழுவதும் வாழும் இன்று தீபாவளியை முன்னிட்டு இந்துக்கள் பட்டாசுகளை வெடித்து கோலாகளமாக பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். பணி, படிப்பு நிமித்தமாக வெளியூர், வெளிமாநிலங்களில் தங்கி இருந்த தமிழ் மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். இரவு முழுவதும் ரயில்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. உறவினர்கள், நண்பர்களுடன் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடி மகிழ பல்வேறு சிரமங்களை கடந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து இருக்கிறார்கள்.

அதிகாலையே எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு புத்தாடை அணிந்து, பூஜை செய்து, வீட்டில் சமைத்த அல்லது கடைகளில் வாங்கிய இனிப்பு பலகாரங்களை சுவைத்து, பட்டாசு வெடித்து அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இன்றும் இளைஞர்கள், சிறுவர்கள் அதிகாலை முதலே பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். புதுமணத் தம்பதிகள் தலை தீபாவளியை கொண்டாடி வருகிறார்கள். வீட்டில் சமைத்த உணவு பலகாரங்கள் மற்றும் இனிப்புகளை மாற்று மதத்தினருக்கு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறி வருகிறார்கள்.

இப்படி ஒருபக்கம் இருக்க மறுபக்கம், தீபாவளியை முன்னிட்டு மட்டனும் இட்லியும் சாப்பிட்டே தீருவோம் என்ற ஆசையில் அதிகாலையேயே கறிக்கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தனர். தீபாவளி என்றால் பட்டாசு, இனிப்பு, பலகாரம், புத்தாடை போன்றவற்றை தாண்டி மட்டன் இட்லியும் முக்கிய உணவாக மாறி வருகிறது. சட்னி சாம்பாருடன் சேர்த்து சாப்பிட வேண்டிய இட்லியை பண்டிகை நாளான தீபாவளி அன்று ஸ்பெசலாக்க மட்டனை தொட்டு சாப்பிடும் வழக்கம் அதிகரித்து உள்ளது.

தொடக்கத்தில் ஒரு சிலரிடம் மட்டுமே இருந்த இந்த வழக்கம் தற்போது பெரும்பாலானோரிடம் பரவி இருக்கிறது. எப்படி ரம்ஜான், பக்ரீத் என்றால் பிரியாணி, பொங்கல் என்றால் சர்க்கரை பொங்கல், கரும்பு நினைவுக்கு வருகிறதோ அதேபோல் தீபாவளி என்றால் மட்டன் இட்லி அனைவரது நினைவுக்கு வரும் அளவுக்கு பிரபலமாகி இருக்கிறது. எனவே இதனை வாங்குவதற்காகவே கடந்த சில நாட்களாக கறிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இன்று காலை சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள கறிக்கடை முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த மட்டன் வாங்கிச் செல்லும் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.












Click it and Unblock the Notifications