அதிமுகவில் 'நேற்று இல்லாத மாற்றம்'... திசை மாறுகிறதா காற்று? பரபரக்கும் ஆதரவு முகாம்கள்!
சென்னை: அதிமுகவில் திடீரென உருவாகி வரும் சில மாற்றங்கள் ஒவ்வொரு ஆதரவு முகாம்களிலும் பரபரப்பான விவாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தர்ம யுத்தத்துக்கு பின்னர் அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம் இணைந்தபோதும் அவருக்கும் சரி.. அவரது ஆதரவாளர்களுக்கும் எந்த முக்கியத்துவமும் இல்லை... பெயரளவிலான பதவிகள் ஒரு சிலருக்கு கொடுக்கப்பட்டதுடன் சரி.

அதிமுகவின் ஒற்றை முகம்
அதிமுகவைப் பொறுத்தவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் ஒற்றை முகம் என்கிற பாதை தீர்மானிக்கப்பட்டதாக நகர்ந்து கொண்டிருந்தது. எல்லாமும் கை மீறிப் போன நிலையில் ஓபிஎஸ் தரப்பும் எந்த இடைஞ்சலும் தராமல் இதனை ஏற்றுக் கொள்ளவும் செய்தது.

அதிமுகவில் மாற்றங்கள்
இதனால் அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவு முகாம் என்பதே இல்லாமல் போய் எல்லோரும் எடப்பாடியாரின் ஆட்கள்தான் என்கிற நிலைமையும் வந்தது. இதனால்தான் அதிமுகவில் அடுத்தடுத்த தேர்தல் வேலைகள் பரபரக்கத் தொடங்கின. மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன; ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டன.

எடப்பாடியார் ஆதரவு அதிகம்
நத்தம் விஸ்வநாதன் போன்ற ஓபிஎஸ் ஆதரவாளர்களும் கூட இந்த அலையில் ஏற்றம் பெற்றார்கள். முதல்வர் வேட்பாளர் யார் என்கிற விவாதத்தில்கூட எடப்பாடியாரின் கைதான் ஓங்கி இருந்தது. ஆனால் அண்மையில் அதிமுக தலைமை கழகத்தில் நடந்த கூட்டம்தான் அந்த கட்சிக்குள் ஏதோ ஒரு சுனாமி மையம் கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தியது.

அதிரடி கோஷங்கள்
அதிமுக தலைமை கழகத்தில் அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது சிலர் ஓபிஎஸ்தான் அம்மாவின் வாரிசு என முழக்கம் போட்டனர்; அவரே முதல்வர் எனவும் கோஷம் எழுப்பினர். இதற்கு பதிலடியாக எடப்பாடியார் ஆதரவாளர்கள், தமிழகத்தின் நிரந்தர முதல்வர் டாக்டர் எடப்பாடியார் என அதிரடி காட்டினர். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த விவாதங்களிலும் கூட ஓபிஎஸ் ஆதரவு திடீரென வலிமை பெற்றதாக தெரிந்தது.

உதயமாகும் புதிய ஓபிஎஸ் அணி
இதன் பின்னணி குறித்து விசாரித்த போது, தென்மாவட்ட அமைச்சர்கள் சிலரே ஓபிஎஸ் ஆதரவாளர்களாக மாற முடிவு செய்துவிட்டனர். தென்மாவட்டமா? பிற மாவட்டமா? என்கிற ஈகோ மோதலில்தான் அவர்கள் இப்படியான ஒரு முடிவு எடுத்திருக்கின்றனர். இன்னொரு பக்கம் எங்கே முதல்வர் வேட்பாளராகவும் அதிமுகவின் தலைவராகவும் எடப்பாடியாரே விஸ்வரூபம் எடுத்து அசைக்க முடியாதவராக ஆகிவிடுவாரோ என அச்சப்படும் சில வெளிசக்திகளும் புதியதாக ஓபிஎஸ் அணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டுகின்றன என்கின்றனர்.

எந்த அணிக்கு போவது?
இதனை முதல்வர் எடப்பாடியார் தரப்பும் புரிந்து கொண்டு தமது ஆதரவு முகாம்களையும் தேர்தல் கால சில வியூகங்களையும் கொஞ்சம் நிறுத்தி வைக்கலாம் என முடிவெடுத்திருக்கின்றனராம். அதிமுகவில் திடீரென வந்துள்ள இந்த மாற்றத்தால் அதிமுக எம்.எல்.ஏக்கள் தொடங்கி நிர்வாகிகள் பலரும் மீண்டும் எந்த அணிக்கு ஆதரவாக போகலாம் என்பது குறித்து படுதீவிரமாக விவாதித்து வருகின்றனராம்.












Click it and Unblock the Notifications