டெல்லி ஆட்சியாக இருந்தால் என்ன.. இருந்துவிட்டு போகட்டுமே.. திண்டுக்கல் சீனிவாசன் கொடுத்த ஷாக்!
சென்னை: அதிமுகவின் ஆட்சி டெல்லி ஆட்சியாக இருந்தாலும் இருந்துவிட்டு போகட்டுமே என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். திமுகவை தவிர வேறு யார் ஆட்சியாக இருந்தாலும் அது டெல்லி ஆட்சியாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்த நிலையில், திண்டுக்கல் சீனிவாசனின் பதில் அதனை ஒப்புக் கொள்வதை போல் அமைந்துள்ளது.
அண்மையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், திமுகவை தவிர்த்து தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும், அது டெல்லியின் ஆட்சியாக தான் இருக்கும் என்று விமர்சித்திருந்தார். மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அதிமுகவின் பெயரை கூட சொல்லவில்லை. தொடர்ச்சியாக என்டிஏ ஆட்சி என்றே சொல்லி வந்தார்.

அதேபோல் அமித்ஷாவும் ஒவ்வொரு முறை பேசும் போதும் என்டிஏ ஆட்சி என்றே கூறி வருகிறார். இதனால் பாஜக ஆட்சியில் பங்கு கேட்பதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் பாஜக 49 சீட்கள் வரை அதிமுகவிடம் எதிர்பார்க்கிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா வரவுள்ள நிலையில், இன்னும் சில கூட்டணி கட்சிகள் என்டிஏ கூட்டணியில் இணையும் என்று சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறி இருந்தார். தேமுதிகவின் எதிர்பார்ப்பு மத்திய பதவியை நோக்கி இருப்பதால், பாஜக பேசி வருவதாகவும் கூறி இருந்தார். கூட்டணிக்கு அதிமுகவே தலைமை என்றாலும், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தமிழக பாஜக குழு அமைத்திருக்கிறது.
அதேபோல் அமமுக, ஜான் பாண்டியன், பூவை ஜெகன்மூர்த்தி, தமிழ் மாநில காங்கிரஸ், தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக், ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த பின்னரே கூட்டணியை உறுதி செய்தனர். அன்புமணி தரப்பு பாமக மட்டுமே எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தது. இதனால் என்டிஏ கூட்டணிக்கு யார் தலைமை என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்த போது, திமுக ஆட்சியை தவிர வேறு யார் ஆட்சி அமைத்தாலும் அது டெல்லியின் ஆட்சி என்ற ஸ்டாலினின் விமர்சனம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு திண்டுக்கல் சீனிவாசன், இருந்துட்டு போகட்டுமே.. இங்கு 10 ரயில் வேண்டுமென்றால் டெல்லியில் தான் சென்று கேட்க வேண்டும்..
இவர்களின் அம்மாவிடமா கேட்க முடியும்.. மத்திய அரசிடம் தான் கேட்க வேண்டும் என்று பதில் அளித்தார். இந்த பதிலால் அருகில் இருந்தவர்களும் முகம் சுழித்தனர். தொடர்ந்து, திமுகவை எதிர்க்கக் கூடிய அத்தனை கட்சிகளும் கூட்டணிக்கு வர வேண்டும். திமுக எதையும் செய்ய லாயக்கில்லாத ஆட்சி.. இதனை அப்படியே போட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். திண்டுக்கல் சீனிவாசனின் கொச்சையான பேச்சு சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications