அதிமுக கூட்டணிக்கு முதல் ஷாக்.. பிறந்த வேகத்தில் உடைகிறது
Recommended Video

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்த மனிதநேய ஜனநாயக கட்சி, இனிமேல் அங்கு இருக்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.
அதிமுக-பாஜக நடுவே கூட்டணி முடிவு அறிவிக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.

பாஜக இடம்பெறக் கூடிய கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி இடம்பெறாது என்றும், சென்னையில் நடக்கும் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்றும், அரசியல் நிலை குறித்து பிப்ரவரி 28ல் முடிவு செய்யப்படும் என்றும் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இதேபோல அதிமுக கூட்டணியில் உள்ள முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதிமுக பாஜக அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி என்றும், இதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் கொள்கைக்கு முரண்பாடான கூட்டணி இது. அதிமுக பாஜக பாமக கூட்டணி படு தோல்வி அடையும். மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் ஆட்சி வரக் கூடாது. தமிழகத்தை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறார் மோடி. இவ்வாறு கருணாஸ் தெரிவித்தார்.
கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினரானவர்களாகும். இருப்பினும் அவர்கள் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள்.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசும்கூட அதிமுக பாஜக கூட்டணியை விரும்பவில்லை என கூறியிருந்தார்.
பாமக, பாஜகவோடு கூட்டணி அமைத்த அதிமுக ஏற்கனவே இருந்த கூட்டணி கட்சிகள் ஆதரவை இழந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும்.












Click it and Unblock the Notifications