அதிமுக குரங்கா? இல்லை பூமாலையா?.. சொல்லுங்க அன்புமணி.. கனிமொழி கிண்டல்!
ஒரு கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதாலேயே அதை வலுவான கூட்டணி என்று கூறிவிட முடியாது என்று திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி குறிப்பிட்டு இருக்கிறார்.
சென்னை: ஒரு கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதாலேயே அதை வலுவான கூட்டணி என்று கூறிவிட முடியாது என்று திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி குறிப்பிட்டு இருக்கிறார்.
லோக்சபா தேர்தலுக்கான அதிமுக கூட்டணி 90% முழுமை பெற்றுவிட்டது. அதிமுக - பாமக - பாஜக ஆகிய கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று இருக்கிறது. இதில் விரைவில் தேமுதிக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி இதற்காக கடந்த ஒரு வாரமாக காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து ஆலோசித்து வருகிறார்.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அதில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் இன்று மாலை திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கிறார்கள். தோழமை கட்சிகளுடனான கூட்டணி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் முடிவு எடுப்பார்.
இதற்கான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார். தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனைகள் தற்போது நடந்து வருகிறது. ஆலோசனை முடிந்த பின் அறிவிப்போம்.
அதிமுக மீது கீழ்த்தரமான கடுமையான விமர்சனங்களை வைத்த கட்சிதான் பாமக. கடைசியில் அதே அதிமுக கட்சியுடன் பாமக கூட்டணி வைத்து இருக்கிறது. இப்படி திட்டிவிட்டு எப்படி கூட்டணி வைத்தார்களோ தெரியவில்லை.
அதிமுக நடத்தும் ஆட்சியை பல முறை அன்புமணி ''குரங்கு கையில் கிடைத்த பூமாலை'' என்றார். இப்போது அவர்களுடனே கூட்டணி வைத்துள்ளார். இப்போது அன்புமணி சொல்லட்டும், அதிமுக குரங்கா, இல்லை பூமாலையா என்பதை.
வலுவான கூட்டணி என்பது எண்ணிக்கையின் அடிப்படையில் கூற முடியாது. கூட்டணியில் உள்ள கட்சிகளின் பலம் என்ன என்பதைத்தான் கருத்தில் கொள்ள வேண்டும், என்று கனிமொழி குறிப்பிட்டார்.
இந்த பேட்டியின் போது கனிமொழியிடம் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர், இதையடுத்து அவர்களிடம் கனிமொழி சிரித்துக் கொண்டே ''அப்பறம் பிளைட் போயிடும்ங்க'' என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.