அண்ணா குறித்த பேச்சால் உடைந்த அதிமுக-பாஜக கூட்டணி! 554 நாளில் ஒட்ட வைத்த எடப்பாடி! டிஜே தான் பாவம்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை அதிமுகவும் பாஜகவும் இணைந்து சந்திக்கும் என மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா உறுதி செய்து இருக்கிறார். டெல்லிக்கு இன்று திடீர் பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அமித் ஷாவை சந்தித்து பேசிய நிலையில் கூட்டணி உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் 2023 செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி அதிமுக பாஜக கூட்டணி முறிந்துவிட்டது என ஜெயக்குமார் அதிரடியாக பேசியிருந்தார். அண்ணா குறித்த பேச்சால் அப்போது உடைந்த அதிமுக பாஜக கூட்டணி தற்போது 554வது நாளில் மீண்டும் இணைந்து இருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக திமுக தான் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியை இழந்த பின் இந்த இரு கட்சிகளே தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
பாஜக, காங்கிரஸ் மற்றும் புதிய வரவாக சிறு சிறு கட்சிகள் எவ்வளவோ முயற்சித்தும் அதிமுக திமுகவை அசைத்துப் பார்க்க முடியவில்லை. காலப் போக்கில் எந்த காங்கிரசை எதிர்த்து திமுக தொடங்கப்பட்டதோ அதை காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி அமைத்துக் கொண்டது.

தொடர்ந்து பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்தது. இதற்கிடையே வாஜ்பாய் காலத்தில் பாஜகவுடன் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கூட்டணி அமைத்தார். அதற்கு பிறகு பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். அவர் இருக்கும் வரை பாஜக அதிமுகவுக்கு எதிரியாகவே இருந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகே அதிமுக பாஜக கூட்டணி அமைந்தது. தொடர்ந்து அதிமுக பிளவுகளை சந்தித்த நேரத்தில் பாஜகவே அவர்களுக்கு ஆதரவு அளித்ததாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்தது. அதற்கு முன் சட்டமன்ற தேர்தல் ஆனாலும் எந்த தேர்தல் ஆனாலும் படுதோல்வியை சந்தித்த பாஜக முதன்முறையாக நான்கு எம்எல்ஏக்களை பெற்றது. அதற்குப் பிறகு கூட்டணியில் விரிசல் விழத் தொடங்கியது. குறிப்பாக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதற்கு பிறகு அதிமுக தலைமையையும் அதன் முன்னாள் தலைவர்களையும் வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கினார். இது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் அண்ணாமலையை விமர்சித்தனர். ஒரு கட்டத்தில் அண்ணாமலையின் பேச்சு எல்லை மீறியது. ஜெயலலிதா குறித்து பேச அதிமுக தலைகள் வெடித்துக் கிளம்பின. தொடர்ந்து தனது பேச்சுக்கு அண்ணாமலை வருத்தம் தெரிவித்தார். இடையே அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்த பாஜக தலைமை கண்டித்ததாகவும் சொல்லப்பட்டது.
தொடர்ந்து சில நாட்களில் திராவிட இயக்க நாயகன் எனக் கூறப்படும் அறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேச திமுக கொதித்தது. அதிமுக தலைவர்களும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் செப்டம்பர் 18ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை கட்சியின் முடிவையே நானும் கூறுகிறேன், நோட்டாவோடு போட்டி போடும் கட்சி, அண்ணாமலைக்கு வயதுக்கு மீறிய பதவி கிடைத்திருப்பதால் தலைகால் புரியாமல் ஆடுகிறார் என மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
அதற்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அதிமுக பாஜக கூட்டணி அமையவில்லை. மக்களவைத் தேர்தலிலும் அதிமுக பாஜக தனித்தனியாக களம் கண்டன. இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வரும் நிலையில் டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்து பேசினார். தொடர்ந்து 2026 இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்திருக்கிறார்.
அமித்ஷா உடனான சந்திப்பில் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், கேபி முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் அதிமுக பாஜக கூட்டணி உடைந்து விட்டது எனக் கூறிய ஜெயக்குமார் டெல்லிக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக 2023 செப்டம்பர் 18ஆம் தேதி உடைந்த அதிமுக பாஜக கூட்டணி 554 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் சேர்ந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications