பட்டும் படாமல் அரசியல்..விஜய் எங்களுக்குத் தான் சப்போர்ட்! பரபரவென பங்கு போடும் நாம் தமிழர்-அதிமுக
சென்னை: நடிகர் விஜய்யின் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தான் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இது மட்டும் அல்லாமல் விஜய் யாரை குறிப்பிட்டு பேசினார் என அரசியல் கட்சிகள் கடும் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தங்களுக்கு ஆதரவாக விஜய் பேசி இருப்பதாக கூறி சமூக வலைதளங்களில் விவாதம் நடத்தி வருகின்றனர் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர்.
சினிமாவில் இருந்த போதே எப்போதும் இந்திய அளவில் மிகவும் புகழ்பெற்ற நடிகராக விளங்கி வரும் விஜய் அரசியலுக்கு வருவேன் என்று சொன்னால் போதாதா?

விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்த உடனேயே உற்சாகமடைந்த அவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி தீர்த்தனர். அறிவிப்போடு நின்று விடாமல் கட்சியை பதிவு செய்வது, கட்சியின் பெயர் அறிவிப்பு, உறுப்பினர்கள் சேர்க்கை, நிர்வாகிகளுடன் ஆலோசனை என அடுத்தடுத்து விஜய் நடத்திய அதிரடி காட்சிகள் ரசிகர்களை விசில் போட வைத்தது.
வழக்கமான அரசியல் கட்சிகளைப் போல அல்லாமல் இளைஞர்கள், மாணவ மாணவிகளை குறி வைத்து நடிகர் விஜய் நகர்த்திய அரசியல் நகர்வுகள் வெகுவாக பாராட்டுதல்களை பெற்றது. குறிப்பாக கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை வரவழைத்து அவர்களுக்கு பணம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டியது வெகுவாக மக்களிடம் கொண்டு சேர்த்தது.
அதுமட்டுமல்லாமல் சுமார் 15 மணி நேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் நின்றபடி சிறிதும் முக சுளிப்பின்றி விஜய் மாணவ மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் வைரல் ஆனது. இதையடுத்து தற்போது அரசியல் தலைவராக முதன்முறையாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இரண்டாவது ஆண்டாக மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழாவில் விஜய் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டாமா என மாணவர்களிடம் கேள்வி எழுப்பிய விஜய், தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது, அதனை கட்டுப்படுத்த வேண்டியது ஆளும் அரசின் கடமை.. ஆனால் அதை இங்கே பேச விரும்பவில்லை மாணவர்கள் போதைக்கு அடிமையாக இருக்க வேண்டாம்.. 'say no to drugs' என உறுதிமொழி அளியுங்கள் என பேசியது சமூக வலைதளங்களில் கவனிப்பை பெற்று இருக்கிறது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம், தமிழகத்தில் அதிகரித்திருக்கும் பொருள் நடமாட்டம், போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் மாணவர்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை பேசியதன் மூலம் ஆளும் திமுக அரசுக்கு எதிராகவே விஜய் பேசி இருப்பதாக கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள். ஆனால் விஜய் வெளிப்படையாக விமர்சிக்கவில்லை பொதுவாக அனைத்து ஆட்சி காலங்களிலும் இந்த பிரச்சனை இருந்திருக்கிறது மாணவர்களுக்கு அறிவுரை மட்டுமே வழங்கியிருக்கிறார் என திமுகவின் கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில் 'say no to drugs' என்ற அதிமுகவின் சமூக வலைதள பிரச்சாரத்தை பேசியிருப்பதன் மூலம் அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் பேசி இருப்பதாக கூறி வருகின்றனர் அதிமுகவினர். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ஒருவர், திமுக ஆட்சியில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் மாணவர்கள் அதிக அளவில் போதைப் பொருளால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை மீட்டெடுக்க வேண்டிய அரசோ போதைப் பொருளை ஊக்குவிப்பது போல நடந்து கொள்கிறது.
இதற்காக கடந்த பல மாதங்களாகவே அதிமுகவினர் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் வாசகத்தை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் உங்கள் பெயருடன் இணைத்து பதிவிட்டுள்ளனர். அதையே விஜய் கூறி இருக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும். மேலும் படித்தவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என கூறி இருக்கிறார். தற்போது திமுக ஆட்சி தான் நடக்கிறது அதனால் விஜய் திமுகவுக்கு எதிராக பேசியிருப்பதாகவே கருதுகிறோம்" என கூறினார்
இது மட்டுமில்லாமல் நாம் தமிழர் கட்சியினர் விஜய்க்கு சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 'தம்பி விஜய்' என நாம் தமிழர் சீமான் முதல் ஆளாக விஜயின் மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வை பாராட்டியதோடு பல தொலைக்காட்சிகளில் விஜயின் எனது நோக்கமும் 2026 சட்டமன்றத் தேர்தல் தான் கூட்டணி குறித்து பேசுவதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது என கூறியிருந்தார். இதை அடுத்து நாம் தமிழர் கட்சியினர் உற்சாகமடைந்திருக்கின்றனர். விஜய் ரசிகர்களோடு சேர்ந்து விஜயின் வீடியோக்களை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். இதனால் வழக்கம் போல இன்றும் விஜய் தான் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications