மீண்டும் நண்பேன்டா.. தமிழகத்தில் 1998-ல் பாஜகவுக்கு முதன் முதலில் சிவப்பு கம்பளம் விரித்த அதிமுக!
சென்னை: தமிழ்ந்நாட்டில் பாஜகவுக்கு முதன் முதலில் சிவப்புக் கம்பளம் விரித்த கட்சி அதிமுக என்பதுதான் சரித்திரம். இந்த சரித்திரத்தின் நீட்சியாக 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி உறுதியாகி உள்ளது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அம்த்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியதன் மூலம், பாஜக- அதிமுக கூட்டணி உறுதியாகி இருக்கிறது.
அதிமுக- பாஜக கூட்டணி வரலாறுதான் என்ன?
1998-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அண்ணா திமுக, பாஜகவுடன் முதன் முதலாக கூட்டணி அமைத்தது. தமிழகத்தில் அதுவரை பாஜக, தனித்துவிடப்பட்ட தீண்டத்தகாத கட்சியாகவே இருந்து வந்தது. முதல் முறையாக அதிமுகதான் பாஜகவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து கூட்டணி வைத்தது.

1999-ம் ஆண்டு அதிமுக ஆதரவுடன் பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு கடுமையான நெருக்கடி கொடுத்தார் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா. மத்திய அமைச்சர்கள், டெல்லியில் இருந்து ஜெயலலிதாவிடம் ஆலோசனை பெற்று முடிவெடுக்க சென்னை போயஸ் கார்டனில் காத்திருக்க வேண்டிய நிலைமை இருந்தது; தமிழ்நாட்டில் அப்போது நடைபெற்ற திமுக ஆட்சியை கலைக்க வாஜ்பாய்க்கு நெருக்கடி தந்தும் பார்த்தார் ஜெயலலிதா. ஆனால் அவர் நினைத்தபடி எல்லாம் வாஜ்பாய் அரசு நடக்காத காரணத்தால், ஆதரவை வாபஸ் பெற்றார் ஜெயலலிதா. ஓராண்டிலேயே அதிமுக- பாஜக கூட்டணி உறவு முறிந்தும் போனது. இதற்கு காரணம் டெல்லியில் சுப்பிரமணியன் சுவாமி நடத்திய டீ பார்ட்டிதான் என்பது சரித்திரம்.
2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் உருவானது. 1999-ம் ஆண்டு முதல் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்திருந்தது. தமிழ்நாட்டில் 2001-ம் ஆண்டு சட்டசபை தேர்தலையும் திமுக- பாஜக கூட்டணிதான் எதிர்கொண்டது. 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறைகளைத் தொடர்ந்து திமுக, பாஜக கூட்டணியை முறித்தது. இதனையடுத்தே 2004-ம் ஆண்டு மீண்டும் பாஜக- அதிமுக கூட்டணி உருவானது. ஆனாலும் பாஜகவுடனான அதிமுக கூட்டணி நீடிக்கவில்லை. பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஜெயலலிதா, அந்த கட்சியுடன் கூட்டணி வைத்ததற்காக முஸ்லிம் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பும் கோரினார்.
2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த உடனேயே அதிமுகவை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது பாஜக மேலிடம். ஆனால் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்றதையோ, தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க இருந்ததையோ டெல்லி பாஜக மேலிடம் விரும்பவில்லை. அத்துடன் சசிகலாவும் சிறைக்கு சென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக்கப்பட்டார். அப்போது அதிமுகவில் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். சசிகலா சிறைக்குப் போன பின்னர் பாஜகவின் முழுமையான கட்டுப்பாட்டுக்கு போனது அதிமுக. அக்கட்சியின் இபிஎஸ்- ஓபிஎஸ் பிரிவுகளை ஒருங்கிணைத்தது முதல் 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல் வரை அதிமுக- பாஜக கூட்டணி நீடித்தது.
தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையின் அதிமுக தலைவர்கள் குறித்த விமர்சனத்தால் இரு கட்சிகளிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டு கூட்டணியும் முறிந்தது. 2024 லோக்சபா தேர்தலை அதிமுகவும் பாஜகவும் தனித்தனி கூட்டணிகளாக எதிர்கொண்டன.
தற்போது 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது அதிமுக. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் சந்தித்து பேசியதன் மூலம் அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் நண்பேன்டாவாகிவிட்டன அதிமுக, பாஜக!












Click it and Unblock the Notifications