அமித்ஷா வருகைக்கு முன்.. அதிமுகவுடன் டீலை முடிக்க பியூஷ் கோயல் திட்டம்.. பிடி கொடுப்பாரா எடப்பாடி?
சென்னை: ஜனவரி 4ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரவிருக்கும் சூழலில், அதற்கு முன்பாக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிக்க பியூஷ் கோயல் திட்டமிட்டுள்ளார். அதற்காக பியூஷ் கோயல் சென்னை வரவுள்ள நிலையில், பாமக மற்றும் தேமுதிக உடனான பேச்சுவார்த்தையை நடத்தி முடிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே இந்த கூட்டணி அறிவிக்கப்பட்டுவிட்டாலும், அடுத்தக் கட்டத்திற்கு இன்னும் நகராமலேயே இருக்கிறது. ஜிகே வாசன், கிருஷ்ணசாமி, ஏசி சண்முகம் உள்ளிட்ட சிறிய கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே என்டிஏ கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் அதிமுக - பாஜக கூட்டணி தரப்பில் எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் முடிவை சொல்லாமல் இருக்கின்றன. பாமகவில் உட்கட்சி மோதல் தொடர்ந்து வரும் சூழலில், தேமுதிக எடப்பாடி பழனிசாமியுடன் அதிருப்தியில் இருக்கிறது. இப்படியான சூழலில் தேமுதிகவின் நிலைப்பாடு ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஜனவரி 4ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரச்சார பயண நிறைவு விழா புதுக்கோட்டையில் நடக்க உள்ளது. அதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரவுள்ளார். அமித்ஷா வருகைக்கு முன்பாக அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்க வேண்டும் என்று பியூஷ் கோயல் முடிவு செய்துள்ளார்.
அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜகவின் தொகுதி பங்கீட்டையும் முடிவு செய்து, பணிகளை தொடங்க வேண்டும் என்றும் பியூஷ் கோயல் விரும்புவதாக சொல்லப்படுகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி காலம் தாழ்த்தி வருவதாகவும், கூட்டணி கட்சிகளை முன்னதாகவே முடிவு செய்து பேச்சுவார்த்தையை தொடங்கினால், அதிமுகவுக்கு அழுத்தம் வரலாம் என்று கருதுகிறார்.
இந்த நிலையில் அமித்ஷா தமிழகம் வருவதால், பியூஷ் கோயல் முன்னதாகவே தமிழ்நாடு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பியூஷ் கோயல் விவாதிக்க உள்ளார். ஆனால் கூட்டணி கட்சிகளை முடிவு செய்யாமல் பாஜக தரப்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனென்றால் ஜனவரி 2ஆவது வாரத்தில் தேமுதிக மாநாடு நடக்கவிருப்பதால், அவர்களின் நிலைப்பாட்டை அறிய எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். அதற்காகவே விஜயகாந்த் குருபூஜையில் எடப்பாடி பழனிசாமி நேரில் கலந்து கொண்டார். இதனால் பியூஷ் கோயலின் திட்டம் பலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications