பாஜக, டிடிவி தினகரன், ஓபிஎஸ், பாமக, தமாகா.. அதிமுகவிடம் மொத்தமாக 84 தொகுதிகளை கேட்கும் அமித்ஷா?
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக பல்வேறு கட்சிகளுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் டிடிவி தினகரன், பாமக, ஓபிஎஸ், தமாகா உள்ளிட்ட 4 தரப்பும் பாஜக கூட்டணிக்கு செல்ல விரும்புவதால், எடப்பாடி பழனிசாமியிடம் 84 தொகுதிகள் வரை அமித்ஷா கேட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சியும் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் உறுதியாக இருந்து வரும் சூழலில், அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே இணைந்துள்ளது. இதனிடையே நடிகர் விஜய் தலைமையிலான தவெக களம் வந்துள்ளதால், தேர்தல் சூடு பிடித்துள்ளது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்திருந்தார். அவர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வெளியில் வந்த போது, கர்சீப்பால் முகத்தை மூடிய காட்சிகள் வெளியாகின. இந்த ஆலோசனையின் போது அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனையின் போது சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 84 தொகுதிகள் வரை அமித்ஷா கேட்டதாக கூறப்படுகிறது. அதாவது அதிமுகவுக்கு 150 தொகுதிகளும், பாஜகவுக்கு 84 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பேசப்பட்டிருக்கிறது. அதற்கான காரணம் என்னவென்றால், தமிழ்நாட்டில் உள்ள முக்கியக் கட்சிகளுடன் பாஜக தான் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.
ஏற்கனவே தமிழ் மாநில காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக கூட்டணியில் இடம்பெற்றன. அந்த 2 கட்சிகளுடன் சேர்த்து டிடிவி தினகரனின் அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வந்து, உள் ஒதுக்கீடாக சில தொகுதிகளை ஒதுக்க முடிவு எடுத்துள்ளது.
அதன் காரணமாகவே அண்ணாமலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த சந்திப்புக்கு பின் ஓபிஎஸ் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக் கொண்டார். இதனால் இருவரும் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி இணைந்தால், அது கிட்டத்தட்ட ஒருங்கிணைந்த அதிமுகவை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். பாஜக தொடக்கம் முதலே அதற்காக முயற்சித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியுடன் இது தொடர்பாகவே அமித்ஷா பேசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பாஜக தரப்பில் 84 தொகுதிகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.
அதில் பாஜகவுக்கு 35 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட உள்ளதாகவும், பாமகவுக்கு 25 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்பின் அமமுக, ஓபிஎஸ் மற்றும் தமாகா உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி இதற்கு ஒப்புக் கொள்வாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஏனென்றால் அதிமுக 150 தொகுதிகளில் போட்டியிட்டால், 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்ட நிலை உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் அதிமுகவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத சூழலும் உருவாகலாம். அதற்கு அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால், எடப்பாடி பழனிசாமியின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications