அதே ஜனவரி மாதம்.. அதே ஆட்சி கலைப்பு பேச்சு.. திமுகவை சீண்டும் பாஜக, அதிமுக நெட்டிசன்கள்
சென்னை: தமிழ்நாட்டில் ஜனவரி மாதத்தில் 2 முறை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை மத்திய அரசுகள் டிஸ்மிஸ் செய்திருக்கின்றன. இதனை முன்வைத்து திமுகவினரை சீண்டும் வகையில் பாஜக, அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 1971-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. அப்போது முதல்வராக கருணாநிதியும் நெடுஞ்செழியன், ராஜாராம் உள்ளிட்டோர் அமைச்சர்களாகவும் அமைச்சரவையில் இடம்பெற்றன.

பின்னர் 1972-ல் திமுக இரண்டாகப் பிளவுபட்டது. திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டு அதிமுகவை தொடங்கினார். திமுகவை பலவீனப்படுத்த காங்கிரஸ், இடதுசாரிகள் எம்ஜிஆரை தூண்டிவிட்டு கட்சியை உடைத்தனர் என்பது திமுகவினர் குற்றச்சாட்டாக இருந்தது.
இந்த காலகட்டத்தில் 1975-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி எமர்ஜென்சி எனும் அவசரநிலைப் பிரகடனத்தை நாடு முழுவதும் அறிவித்தார். அப்போது எமர்ஜென்சியை மிக கடுமையாக எதிர்த்தது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த திமுக. முதல்வராக இருந்த கருணாநிதி மகனும் இன்றைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சித்ரவதைகளை எதிர்கொண்டனர்.
மத்திய அரசை மிகக் கடுமையாக திமுக அரசு எதிர்த்து வந்த நிலையில் 1976-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதி, திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அப்போது தமிழ்நாட்டு ஆளுநராக இருந்தவர் கேகே ஷா. நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர் பக்ருதீன் அலி முகமது. திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய காரணமாக சொல்லப்பட்டது பிரிவினைவாதம்தான். 1976-ம் ஆண்டு ஜனவரி இறுதியில் திராவிடர் கழகம் தஞ்சையில் நடத்திய மாநாட்டில் திமுகவின் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது திராவிடர் கழகம், தமிழ்நாடு தமிழருக்கே என்கிற தனிநாடு முழக்கத்தை வலியுறுத்தி வந்தது. பிரிவினைவாத இயக்கமாக அப்போது கருதப்பட்ட திராவிடர் கழகத்துடன் திமுக அரசு நெருக்கமாக, இணக்கமாக இருக்கிறது என்பதுதான் ஆளுநர் கேகே ஷாவின் அறிக்கை. அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் மாநில அரசுகளை கலைக்க கூடிய 356-வது பிரிவை பயன்படுத்தி திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர், காங்கிரஸ் கட்சிகள் மீது ஊழல் புகார்கள் தெரிவித்தன. நீதிபதி சர்க்காரியா கமிஷனும் விசாரணை நடத்தியிருந்தது.
இதன்பின்னர் 1989-ல் மீண்டும் திமுக ஆட்சியை கைப்பற்றியது. அப்போது எம்ஜிஆர் மறைந்த பின்னர் அதிமுக ஜெயலலிதா, ஜானகி அணிகளாக பிளவுபட்டிருந்தது. தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த போது, இலங்கையில் இந்திய அமைதிப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. இந்திய அமைதிப்படை மீது கடும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. விடுதலைப் புலிகள் தவிர்த்த இதர விடுதலை இயக்கங்கள் இந்தியாவில் அடைக்கலம் கோரி வந்தன. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் தமிழ்நாட்டின் திமுக அரசுக்கும் பல்வேறு கருத்து மோதல்கள் ஏற்பட்டன. அப்போதுதான் ஈழத் தமிழர் தலைவர்களில் ஒருவரான பத்மநாபா படுகொலை சம்பவம் நடந்தது. இந்த பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நாட்டின் ரகசியங்களை பகிர்ந்து கொண்டதாக கூறி திமுக ஆட்சியானது 1991-ம் ஆண்டு ஜனவரி 30-ல் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அப்போது மத்திய சட்ட அமைச்சராக இருந்தவர் சுப்பிரமணியன் சுவாமி.
தற்போதும் தமிழ்நாட்டு ஆளுநருடன் ஆளும் திமுக அரசு கடும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தி வருகிறது. உச்சகட்டமாக தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் முன்பாகவே அவருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனால் சட்டசபையில் இருந்து ஆளுநரே வெளிநடப்பு செய்தார். நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பாஜக தலைவர்கள் சிலர் கூறி வருகின்றனர்.
இதனால் 1971-ம் ஆண்டு ஜனவரி 31, 1991-ம் ஆண்டு ஜனவரி 30 ஆகிய நாட்களில்தான் திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது என்பது வரலாறு என பதிவிட்டு திமுக ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என்பதை சமூக வலைதளங்களில் பாஜக, அதிமுகவினர் வெளிப்படுத்தி திமுகவை சீண்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications