அமவுண்டை பாதியாக குறைத்த மா.செ.க்கள்..பாதியில் பறந்த ஏஜெண்ட்கள்! என்ன இது இரட்டை இலைக்கு வந்த சோதனை?
சென்னை: தேர்தலில் அதிமுக சார்பில் வாக்குச்சாவடிகளை கண்காணிக்க ஏற்பாடு செய்திருந்த பூத் ஏஜெண்டுகள் திடீர் திடீரென மாயமானதால் அந்த கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செலவுக்காக தலைமை கொடுத்த பணத்தை மாவட்ட செயலாளர்கள் பாதியாக குறைத்ததன் விளைவாகவே இந்த திடீர் மறைவு எனவும், வேறு கட்சி ஒன்றுடன் சேர்ந்து சில உள்ளடி வேலைகளும் நடந்து இருப்பதாக குமுறுகின்றனர் அதிமுக தொண்டர்கள்.
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு ஆறு மணி வரை நடைபெற்றது.

வாக்குப் பதிவு தொடங்கிய ஏழு மணியிலிருந்து வாக்குப்பதிவானது தமிழகத்தை பொறுத்தவரை அமைதியான முறையிலேயே நடைபெற்றது. சில இடங்களில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவை உடனடியாக சரி செய்யப்பட்டன.
மாயமான ஏஜெண்டுகள்: பெரிய அளவிலான பிரச்சனைகளோ வன்முறை சம்பவங்களோ தமிழகத்தில் நடைபெறவில்லை. காலை 7:00 மணிக்கு முன்னதாக மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அரசியல் கட்சி பூத் ஏஜெண்ட்களின் முன்னிலையில் அழிக்கப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு ஏழு மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து வாக்காளர்களின் பெயர்கள் புகைப்படம் உள்ளிட்டவற்றை பூத் ஏஜெண்டுகள் கண்காணித்து வாக்கு பதிவு செய்ய அனுமதித்தனர். மதியம் வரை சுமூகமாக சென்ற நிலையில் மதியத்திற்கு மேல் பல இடங்களில் அதிமுக பூத் ஏஜெண்டுகள் திடீர் திடீரென மாயமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
செலவு தொகை: பொதுவாக பூத் ஏஜெண்டுகளுக்கு குறிப்பிட்ட தொகையை கட்சிகள் மாவட்ட செயலாளர்கள் மூலம் தேர்தலுக்கு முதல் நாள் இரவு வழங்கும். அந்த தொகை பூத் ஏஜெண்டுகளுக்கான உணவு செலவு மற்றும் பேனா பேப்பர் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக பகிர்ந்து அளிக்கப்படும். அந்த வகையில் பெரிய பெரிய வாக்குச் சாவடிகளுக்கு 30 ஆயிரம் ரூபாயும் சிறிய வாக்குச்சாவடிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரையிலும் அதிமுக தலைமையால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த தொகையை மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் மூலம் கிளைக் கழக நிர்வாகிகளிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.
குறைத்த மா.செ.க்கள்: ஆனால் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகையை விட இந்த ஆண்டு குறைந்த தொகையே வழங்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் பூர்த்தி ஏஜெண்டுகளுக்கு ஒரு சில இடங்களில் பணமே வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுக உள்ளூர் நிர்வாகிகள் சிலரிடம் பேசிய போது கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வாக்குச்சாவடி செலவுகளுக்காக 25 ஆயிரம் ரூபாய் கட்சி மாவட்ட செயலாளர்கள் மூலம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த தேர்தலில் அதை 15,000 ரூபாயாக குறைத்து விட்டனர்.
கட்சியுடன் டீலிங்: இதனால் குறிப்பிட்ட செலவுகளை செய்ய முடியாமல் கிளை செயலாளர்களே செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் பூத் ஏஜெண்டுகளுக்கு செலவுக்கு கூட பணம் கொடுக்க தட்டுப்பாடு ஏற்பட்டதால் மதிய உணவுக்கு சென்று வருகிறேன் என்று சென்ற சில பூத் ஏஜெண்டுகள் அதற்குப் பிறகு வரவே இல்லை இதனால் கடைசி கட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதை கண்காணிக்க முடியாமல் போய்விட்டதாக கூறுகின்றனர். மேலும் இதனை பயன்படுத்திக்கொண்ட ’சில’ கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பூத்ஏஜெண்டுகளை வளைத்து போட்டு விட்டதாகவும் அதன் காரணமாகவே மதியத்திற்கு பிறகு பூத் ஏஜெண்டுகள் மாயமானதாகவும் கூறப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட சில கட்சிகளுக்கு அதிக அளவிலான வாக்காளர்களில் வாக்குகள் விழுந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications