பரபரப்பான சூழ்நிலையில்... அதிமுக அலுவலகத்தில் தொண்டர்களுக்கு இன்று முதல் அனுமதி- பலத்த பாதுகாப்பு
சென்னை: அதிமுகவில் பரபரப்பான சூழ்நிலை நிலவும் நிலையில் அக்கட்சியின் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்துக்குள் இன்று முதல் தொண்டர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் அங்கு அசம்பாவிதம் நிகழாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Recommended Video
அதிமுகவில் எடப்பாடி கோஷ்டி கடந்த ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுவை கூட்டியது. அப்பொதுக்குழுவில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டது; அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

ஜூலை 11 மோதல்
அதிமுக எடப்பாடி கோஷ்டியின் பொதுக்குழு நடைபெற்ற அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது கோஷ்டியினர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அப்போது எடப்பாடி கோஷ்டி, ஓபிஎஸ் கோஷ்டி இடையே பெரும் மோதல் வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்தனர்.

சீல் வைத்த வருவாய்த்துறை
மேலும் அதிமுக தலைமை அலுவலகத்தின் அறைகளில் இருந்த கோப்புகளை ஓபிஎஸ் கோஷ்டியினர் அள்ளிச் சென்றனர். இதனால் அதிமுக தலைமை அலுவலகமே போர்க்களமாக கட்சி தந்தது. இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தை வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

நீதிமன்றம் தடை
இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி கோஷ்டியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. மேலும் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20 வரை அதிமுக தொண்டர்கள், ராயப்பேட்டை தலைமை அலுவலகத்துக்குள் செல்லவும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தடை நேற்றுடன் முடிவடைந்துவிட்டது.

இன்று முதல் அனுமதி
இதனையடுத்து இன்று முதல் ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்துக்குள் அக்கட்சி தொண்டர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அண்மையில் அதிமுக எடப்பாடி கோஷ்டியின் ஜூலை 11 பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் அதிமுக அலுவலகத்துக்குள் தொண்டர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் மீண்டும் எடப்பாடி கோஷ்டி, ஓபிஎஸ் கோஷ்டி மோதலில் ஈடுபடக் கூடிய சூழ்நிலை உள்ளது. இதையடுத்து ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் சென்னை ராயப்பேட்டை பகுதியில் பதற்றம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications