’அனைவரும்’ ஒன்று சேர்ந்து அதிமுகவைச் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்.. எடப்பாடி கொடுத்த மெசேஜ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புரட்சித் தலைவர் என அழைக்கப்படும் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர்-ன் 108வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினர். முன்னதாக அதிமுக தொண்டர்களுக்கு எழுதிய மடலில், அனைவரும் ஒன்றுசேர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தீய சக்தியிடமிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவதாரம் எடுத்துவந்த மங்காப் புகழ்பெற்ற மாமணி; எத்தனை எத்தனை தலைமுறைகள் தவம் செய்து பெற்றார்களோ என்று வியந்து பார்க்கும் வண்ணம் நமக்குக் கிடைத்திட்ட தெய்வப் பிறவி எம்ஜிஆர்..

aiadmk mgr edappadi palaniswami

ஏழை, எளிய மக்களின் கண்ணீரைத் துடைத்த வள்ளல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர், அவர்களின் 108-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் இத்தருணத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளுக்கும், கோடானு கோடி புரட்சித் தலைவரின் ரசிகர்களுக்கும், அனைத்துத் தமிழர்களுக்கும், எனது மகிழ்ச்சி கலந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும், நம்முடைய அன்புத் தலைவர், இதய தெய்வம், மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாள் என்பது, ஒரு மகிழ்ச்சியையும், உணர்வுப்பூர்வமான அனுபவங்களையும், தாய்மைப் பாசத்தையும், கருணையையும், மனித நேயத்தையும், மானுடப் பற்றையும் மலரச் செய்யும் பொன்னாள் தான் இந்நாள்.

"வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்" என்ற கேள்வியை மக்கள் முன் எழுப்பினால், "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.", "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்." என்று தான் பதில் வரும். அந்த அளவிற்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தன்னிகரற்ற மனிதாபிமானம் கொண்ட மனிதராக, திரைத் துறையில் பன்முகத் தன்மை கொண்ட ஆளுமையாக, அரசு நிர்வாகத்தில் ஆட்சி செய்யும் நல்இதயம் படைத்த தீரமும், வீரமும் கொண்டு நிர்வாக ஆற்றல் படைத்த தலைவராக, எதைச் செய்தாலும் அதில் வெற்றிவாகை சூடும் சாதனையாளராக, இவரைப் போல் இன்னொருவர் பிறக்க முடியாது என்று அவருடைய எதிரிகளும் தங்கள் மனதிற்குள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சரித்திர நாயகராக வாழ்வாங்கு வாழ்ந்தவர்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய ஆட்சிக்குப் பின்னர் தான், அரசாங்கங்கள் ஒரு சாதாரண தனி மனிதனை முன்வைத்து திட்டங்களைத் தீட்ட ஆரம்பித்தன. அந்தத் திட்டங்கள், ஒரு ஜனநாயகம் என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு இலக்கணம் வகுக்கின்ற திட்டங்களாகவும், சாதாரண தனி மனிதனுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் அரசாங்கத்தினுடைய முதல் கடமை என்று உணர்த்துகின்ற திட்டங்களாகவும் அமைந்தன.

aiadmk mgr edappadi palaniswami

புரட்சித் தலைவர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டம், இலவச வேட்டி சேலை திட்டம் உட்பட ஏழை, எளியவர்களுக்காக தீட்டப்பட்ட பல்வேறு திட்டங்கள்தான் இன்றளவும் வரலாறாய் நிலைத்து நிற்கிறது. இனி, எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இத்தகைய திட்டங்களைத் தான் அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்; இதுபோன்ற திட்டங்களைத்தான் புதிதாக அறிமுகம் செய்ய வேண்டும் என்ற அளவிற்கு, வரலாற்றையே 'எம்.ஜி.ஆருக்கு முன், எம்.ஜி.ஆருக்குப் பின்' என்று பிரிக்கும் அளவிற்கு ஆட்சி செய்த புகழுக்குரியவர் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். அவர் விட்டுச் சென்ற அரசியல் பாடமும், அவர் வாழ்ந்து காட்டிய அரசியல் முறையும் தான் நமக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.

புரட்சித் தலைவரைத் தொடர்ந்து, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்திலும்; அம்மா அவர்களின் நல்லாசியோடு செயல்பட்ட, எனது தலைமையிலான ஆட்சியிலும், மக்கள் நலன் சார்ந்து நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் எராளம், ஏராளம்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், தமிழ்ச் சமூகத்திற்கு என்னவெல்லாம் தொண்டாற்றி இருப்பாரோ, அவற்றையெல்லாம் செய்து முடிப்பதற்காகத்தான், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்குப் பிறகு, நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மக்கள் பணிகளை தொய்வில்லாமல் ஆற்றி வருகின்றது.

தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை, குடும்ப ஆட்சியை விரட்டவும், புரட்சித் தலைவரின்; புரட்சித் தலைவி அம்மாவின் பேரியக்கத்தை ஆட்சிப் பீடத்தில் மீண்டும் அமர்த்தவும், தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

புரட்சித் தலைவர்; புரட்சித் தலைவியின் பொற்கால ஆட்சியை தமிழ் நாட்டில் மீண்டும் மலரச் செய்யும் மாபெரும் மக்கள் பணியில் நாம் அனைவரும் முழு மனதோடு ஈடுபட இந்நாளில் உளமார உறுதியேற்போம்.

ஜனநாயகத்தை சீர்குலைக்க, நம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்குகின்ற கடமையும், பொறுப்பும், நம் அனைவர் முன்பும் இருக்கின்றது. அந்தப் பயணத்தில் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருடைய உழைப்பும், ஆர்வமும் மிகவும் இன்றியமையாததாகும். உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் என்றென்றும் நான் உறுதுணையாக இருப்பேன். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்; வெற்றிவாகை சூடுவோம்" என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+