அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவிக்க ஓபிஎஸ் விதித்த நிபந்தனைகள் என்ன தெரியுமா
அஇஅதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிபந்தனை விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவிக்க துணை முதல்வர் ஓபிஎஸ் நிபந்தனை விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வழிகாட்டுதல் குழு அமைத்தால் மட்டுமே முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் எனவும், வழிகாட்டுதல் குழுவில் இடம் பெறுபவர்களின் பெயர்களை அறிவிப்பதும் அவசியம் என ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளாராம்.
எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக இன்னும் சில ஆண்டுகளில் பொன்விழா கொண்டாட போகிறது. தனக்குப் பிறகும் 200 ஆண்டுகள் அதிமுக தழைத்து இருக்கும் அரியணையில் ஆட்சி செலுத்தும் சட்டசபையில் கம்பீரமாக அறிவித்தார் அப்போதைய பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா.
ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்தது. கட்சியும் சின்னமும் முடக்கப்பட்டது. மீண்டும் இணைந்து கட்சியும் சின்னமும் மீட்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் ஆட்சி முடிந்த நிலையில் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது பற்றிய பஞ்சாயத்து பரபரப்பாக நடந்து வருகிறது.
துணை முதல்வர் ஓபிஎஸ் முதல்வர் இபிஎஸ் இடையே நீயா நானா என்ற போட்டி ஏற்பட்டது. இதில் அமைச்சர்கள் பாடுதான் படு திண்டாட்டமாக போனது. இருவரின் வீடுகளுக்கும் சென்று மாறி மாறி ஆலோசனை நடத்தினர்.
உச்சக்கட்டமாக நேற்று காலை தொடங்கிய ஆலோசனை விடிய விடிய நீடித்தது. அதிகாலை 3.30 மணிக்கே ஆலோசனை முடிவுக்கு வந்தது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவிக்க வேண்டும் எனில் தன்னுடைய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
AIADMK CM Candidate: முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய இபிஎஸ் ஒபிஎஸ் வீட்டில் விடிய விடிய நடந்த ஆலோசனை
அதிமுகவில் அதிகாரம் மிக்க 11 பேர் கொண்ட குழுவை அறிவிக்க வேண்டும் என்றும் யார் யார் வழிகாட்டுதல் குழுவில் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் திட்டவட்டமாக கூறிவிட்டாராம். வழிகாட்டுதல் குழு இல்லாவிட்டால் தனக்கு முழு அதிகாரம் வேண்டும் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்பே அறிவித்தபடி இன்று முதல்வர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியாகுமா? இல்லாவிட்டால் ஓ.பன்னீர் செல்வம் விதித்த நிபந்தனைகளின் படி வழிகாட்டுதல் குழு அமைக்கப்படுமா பொறுத்திருந்து பார்க்கலாம்.