சசிகலா-ஓ.ராஜா திடீர் சந்திப்பு..இபிஎஸ்க்கு நெருக்கடி கொடுக்கிறாரா ஓபிஎஸ்? உச்சகட்ட பரபரப்பில் அதிமுக
சென்னை : திருச்செந்தூரில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரான ஓ.ராஜா அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள சசிகலாவை நேரில் சந்தித்துள்ள நிலையில் அதிமுகவில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வரான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து ஊழல் வழக்கில் அவர் சிறை சென்ற நிலையில் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நான்கு ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்த நிலையில் சட்டமன்ற தேர்தலிலும், ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது.
AIADMK Split: அதிமுக இரண்டாக உடைகிறதா?.. சசிகலா ரீஎன்ட்ரி?.. அடுத்தடுத்த ட்விஸ்ட்களால் பரபரப்பு!
அதிமுகவில் சசிகலா?
இதனால் இரட்டை தலைமைக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. பலகட்ட பரபரப்புகளுக்கு பிறகு அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை சேர்க்க வேண்டும் என தேனியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை ஓரம்கட்ட ஓபிஎஸ் முயற்சிப்பதாகவும் கூறப்பட்டது.
தேனியில் தீர்மானம்
அதிமுக ஒருங்கிணைப்பாளரின் சொந்த மாவட்டத்திலேயே ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதை ஓபிஎஸ்ஸிடம் கொடுக்கப்பட்டது எப்படி என்ற கேள்வியும் எழுந்தது. எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் சேலத்தில் சந்தித்த நிலையில், மற்றொரு புறம் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சந்திப்பது என களம் சூடு பிடித்தது.
சசிகலா - ஓ.ராஜா சந்திப்பு
ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு என்பது மாறி, சசிகலா ஆதரவு தரப்பு - இபிஎஸ் ஆதரவு தரப்பு என அதிமுகவுக்குள் உருவாகியுள்ளதாக மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலாவை தனியார் விடுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் சகோதரரான ராஜா திடீரென சந்தித்து பேசியுள்ளார். சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற குரல் தேனியில் இருந்து தமிழகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் சசிகலா ஓ.ராஜா இடையேயான இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
எடப்பாடி பழனிசாமி
முதல்வராக பதவியேற்றபோது கட்சிக்குள் தனது ஆதிக்கத்தை அதிகம் ஏற்படுத்திய எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கட்சியின் முகமாக தன்னை முன்னிறுத்துவதில் அதிக கவனம் கொண்டிருந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும் எதிர்ப்புகளுக்கு இடையேயும் காட்சியில் தனக்குள்ள செல்வாக்கின் மூலம் தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி கொண்டார்.
Recommended Video
ஓபிஎஸ் திட்டம்
தேர்தலில் தோல்வியடைந்த போதும் தன்னை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்க வைக்கும் அளவுக்கு கட்சிக்குள் அவரது செல்வாக்கு கூடி இருந்தது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிர்ச்சியில் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில் தொடர்ந்து எப்படியாவது எடப்பாடி பழனிச்சாமியை ஓரங்கட்ட ஓபிஎஸ் தரப்பு நினைத்து வந்ததாகவும் அதற்கு சசிகலாவை ஆயுதமாக பயன்படுத்தி கொள்ள இருப்பதாகவும் அதிமுகவின் முன்னணி நிர்வாகிகளே கூறி வருகின்றனர்.