மீண்டும் உடைந்த அதிமுக.. எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் சபாநாயகரிடம் 30 எம்.எல்.ஏக்கள் மனு
சென்னை: அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 30 எம்.எல்.ஏக்கள் சந்தித்தனர். அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக எஸ்.பி.வேலுமணியை தேர்ந்தெடுக்கும் கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கி உள்ளனர்.
அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என மொத்தமுள்ள 47 அதிமுக எம்.எல்.ஏ.க்களில் 17 பேர் மட்டுமே எடப்பாடிக்கு ஆதரவாக தற்காலிக சபாநாயகரிடம் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதவியேற்காத நிலையில், அவர் மதியம், தனியாக தற்காலிக சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொண்டார்.
இன்று காலை சட்டமன்றத்துக்கு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு குழுவாகவும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு குழுவாகவும் தனித்தனியாக வந்தனர். இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை.
அதிமுகவில் மொத்தம் 47 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் சட்டமன்றச் செயலரிடம் மனு அளித்துள்ளனர். அதில், அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் எனத் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் இன்று மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் தற்காலிக சபாநாயகரை எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். அப்போது அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எஸ்.பி.வேலுமணி செயல்பட வேண்டும் என 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கி உள்ளார்.
தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து, ஆட்சியில் பங்கு பெறும் திட்டத்தை சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி ஆகியோர் முன்மொழிந்துள்ளனர். இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்காத நிலையில் அதிமுக இரு தரப்பாக பிளவு பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இரு தரப்பினரும், சட்டமன்றக் குழு தலைவர் விவகாரத்தில் தனித்தனியாக மனு அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications