தபால் வாக்குகளை மே 2இல்தான் எண்ண வேண்டும்.. அதற்கு முன்பாக வாக்குபெட்டியை திறக்க கூடாது - அதிமுக மனு
சென்னை: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ஆம் தேதியன்று தான் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டுமெனத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக கோரிக்கை மனு கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகக் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 2ஆம் தேதி எண்ணப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாகத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கையைப் பாதுகாப்பாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ஆம் தேதியன்று தான் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டுமெனத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் சட்டத்துறை இணைச் செயலாளர் பாபு முருகவேல் ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "பல்வேறு மாவட்டங்களிலிருந்து மே 1ஆம் தேதி, அதாவது வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முதல்நாளே தபால் வாக்குகள் எண்ணப்படவுள்ளதாக அதிமுகவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் எப்பொழுதும் பின்பற்றப்படும் தேர்தல் நடைமுறையின்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று தான் தபால் வாக்குகளை எண்ண வேண்டும் எனத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்தோம்" என்று தெரிவித்தார் .
மேலும் வாக்கு எண்ணிக்கை நடைமுறை கடந்த காலங்களில் எப்படி இருந்ததோ அதே போலவே இந்த முறையும் பின்பற்றப்பட வேண்டும் எனவும் அதை ஏற்கனவே நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications