வேகம் காட்டும் இபிஎஸ்... வரும் 7 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7 ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவத்தை இந்தக் கூட்டம் ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை கோஷம் எழுந்தது.
இதனால் அதிமுக தலைமை பதவியை கைப்பற்றுவதில் ஓ பன்னீர் செல்வத்திற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஜுலை மாதம் அதிமுக பொதுக்குழுவை கூட்டிய எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டர்.

ஓபிஎஸ் ஈபிஎஸ் மோதல்
இதற்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் கடுமையான சட்ட போராட்டம் நடத்தினார். உச்ச நீதிமன்றம் வரை சென்ற ஓபிஎஸ்க்கு வழக்குகள் அவருக்கு சாதகாமாக அமையவில்லை. கட்சியிலும் நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பெரும் ஆதரவு நிலவியது. இந்த நிலையில், அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கு அச்சாரமிடும் விதமாக, அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி
எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி பொதுச்செயலாளராக தேர்வு ஆகும் சூழல் இருந்த நிலையில், ஓ பன்னீர் செல்வம் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் அறிவிப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. எனினும், இந்த மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் போட்டியின்றி ஒருமனதாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யபட்டார்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இதற்கிடையே, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மேல் முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுகவில் தொடர்ந்து பரபரப்பு நீடித்துக் கொண்டெ இருக்கும் நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7 ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்தது.

வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவகலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் வருகிற 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு கட்சியின் தலைமை நிலைய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

முதல் முறையாக ஈபிஎஸ் தலைமையில்..
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட பிறகு நடைபெறும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் எது குறித்து ஆலோசிக்கப்படும் என்பதும் குறித்து அக்கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுகவின் ஒற்றைத்தலைமையாக ஈபிஎஸ் மாறியுள்ள நிலையில் நடைபெறும் இந்தக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications