அதிமுக லெட்டர் பேடு, ஈபிஎஸ் கையெழுத்தும் இல்லை.. ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம்... செமகடுப்பில் ஈபிஎஸ் கோஷ்டி
சென்னை: அதிமுக லெட்டர் பேடில் ஓ.பிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்துடன்தான் இதுவரை அறிக்கைகள் வெளியாகின. சென்னை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிந்த மறுநாள் இந்த வழக்கத்தை தூக்கி எறிந்துவிட்டு தன்னுடைய பெயரில் மட்டும் அறிக்கை வெளியிட்டுள்ளார் ஓபிஎஸ். இதனால் அதிமுகவின் உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெளியே வந்துள்ளது. இது ஈபிஎஸ் கோஷ்டியை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.
தேர்தலில் உள்ளடி வேலைகளை கண்டுகொள்ளாத அதிமுக தலைமை.. ஜெயக்குமார் தொடங்கி... கிளம்புதா புதிய பூதம்?
சென்னையில் நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு முதல் நாள் வரை அதிமுக அறிக்கைகள் அக்கட்சியின் லெட்டர் பேடில்தான் வெளியாகும். அதுவும் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் அறிக்கை என்றுதான் வெளியாகும்.
கூட்டாக அறிக்கை
கடந்த 6-ந் தேதி 69% இடஒதுக்கீடு தொடர்பான அறிக்கையைக் கூட இருவரும் இப்படி கூட்டாகத்தான் வெளியிட்டிருந்தனர். ஆனால் இன்று கொரோனா பரவலைத் தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின்ம் 2 வார கால லாக்டவுனை அறிவித்தார். இந்த அறிவிப்பை வரவேற்று ஓ.பன்னீர்செல்வம் மட்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம்
வழக்கம் போல அதிமுக லெட்டர் பேடில் இந்த அறிக்கை வெளியாகவில்லை. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரும் கையெழுத்தும் இல்லை. எந்த வித அதிமுக அடையாளமும் இல்லாமல் ஓ. பன்னீர்செல்வம், கழக ஒருங்கிணைப்பாளர், அதிமுக என எழுத்துகள் மட்டுமே உள்ள அறிக்கையை ஓபிஎஸ் வெளியிட்டுளார்.
எம்.எல்.ஏக்கள் கூட்டத்தால் பஞ்சாயத்து
சென்னையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டசபை குழு தலைவர் பதவிக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் போராடிப் பார்த்தனர். இதனால் எந்த முடிவும் எடுக்காமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இருதரப்பும் ஜெயலலிதா சமாதிக்கு போக, அங்கே ஆதரவாளர்கள் ஆக்ரோஷ முழக்க எழுப்பினர். எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே ஒருவருக்கு ஒருவர் காரசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால்தான் எம்.எல்.ஏக்கள் கூட்டம் திங்கள்கிழமை மீண்டும் கூட்டப்பட்டுள்ளது. இந்த பின்னணியிக்ல் ஓபிஎஸ்-ன் அறிக்கை பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.
மிரட்டல் விடுக்கிறாரா ஓபிஎஸ்?
தமக்கு சட்டசபை குழு தலைவர் பதவி கிடைக்காவிட்டால் தனிவழியே செயல்படுவேன் என்பதைத்தான் இந்த அறிக்கை மூலம் ஓபிஎஸ் சொல்ல வருகிறார் என்கின்றனர் அதிமுக வட்டாரங்கள். இதுவரையில் இல்லாத பழக்கமாக இப்படி எல்லாம் தனித்து அறிக்கை வெளியிட்டால் நாங்கள் பணிந்து போவோமோ? இந்த மிரட்டல் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்கிறது ஈபிஎஸ் கோஷ்டி. எப்ப, எப்படி வெடிக்கப் போகுதோ?