நாவடக்கம் தேவை- ஜெயலலிதா குறித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேச்சுக்கு ஜெயக்குமார் கண்டனம்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்த கருத்துகளுக்கு அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் 1989-ம் ஆண்டு தமிழக முதல்வராக மீண்டும் கருணாநிதி பொறுப்பேற்றார். அப்போது ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளால் தமக்கு அரசியலே வேண்டாம் என முடிவெடுத்தார் ஜெயலலிதா.இதனையடுத்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை எழுதிய ஜெயலலிதா, அதனை தமது கார் ஓட்டுநரிடம் கொடுத்துவிடுகிறார். பத்திரிகையாளர்களிடமும் சபாநாயகரிடம் இந்த ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட வேண்டும் என்பது ஜெயலலிதா உத்தரவு. ஆனால் மறுநாள் பத்திரிகைகளில் ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதம் தொடர்பான எந்த செய்தியும் வரவில்லை.

அப்போது, ஓட்டுநரை அழைத்து விசாரிக்கிறார் ஜெயலலிதா. தாம் கடிதத்தை எடுத்து சென்ற போது, சிலர் என்னை தாக்கி கடிதத்தை பறித்துக் கொண்டனர் என்கிறார். அப்போது ஜெயலலிதாவின் சந்தேகம் சசிகலாவின் கணவர் நடராஜன் மீது ஏற்பட்டது. தமது வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதை நடராஜன் உளவு ஆட்கள் மூலம் கண்காணிக்கிறார் என்பதை ஜெயலலிதா புரிந்து கொண்டார். ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதங்களை பறித்து பதுக்கி வைத்தவர் சசிகலா நடராஜன். அப்போது சாத்தூர் ராமச்சந்திரன் என்ற இன்றைய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், இன்றைய காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் ஜெயலலிதாவின் தளபதிகளாக இருந்தனர். அதனால் இருவரையும் நடராஜன் அழைத்து, ஜெயலலிதா அரசியலை விட்டு விலகி ஹைதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டத்தில் குடியேற முடிவு செய்துவிட்டார் என கூறுகிறார். அன்று நடராஜன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ஜெயலலிதா, அரசியலைவிட்டு வெளியேறாமல் ஹைதராபாத்துக்கு குடிபோகாமல் தடுத்தனர் சாத்தூர் ராமச்சந்திரனும் திருநாவுக்கரசரும்.
இதனை குறிப்பிடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தற்போதைய கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கருணாநிதி போன்ற பெருந்தலைவர்கள் உள்ள தமிழ்நாட்டில் அந்த ராட்சசியை (ஜெயலலிதா) இந்த தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து அறிமுகப்படுத்தி இந்த நாட்டை நாசமாக்கியதில் எனக்கும் பங்குண்டு. நல்லா இருந்த நாட்டை நாசமாக்கியதிலே எனக்கும் ஒரு பங்குண்டு.இந்த நாடு ஒரு 10 ஆண்டுகாலம் குட்டிச் சுவரானது.. அதற்கும் காரணம் நாங்கள்தான். அந்தம்மா ஹைதராபாத்துக்கு போறேன்னு கிளம்பிருச்சு. அப்ப நடராஜன் (சசிகலா கணவர்) எங்களுக்கு போன் செய்து சொல்கிறார்.. அந்த அம்மா ஹைதராபாத்துக்கு போகுது.. போய் தடுத்து நிறுத்துங்க என்றார் நடராஜன். நானும் திருநாவுக்கரசரும் ரெண்டுபேரும்தான் கைலியோட ஓடுகிறோம்.. கைலியோட ஓடிப் போய் அம்மா, நீ ஹைதராபாத் போயிடாத.. இந்த நாட்டை காப்பாத்த உன்னைவிட்டா ஆளு இல்லைன்னு நாங்க செய்த பாவத்தை இந்த நாடு 10 ஆண்டுகாலம் அனுபவிச்சது. அதை எல்லாம் மாற்றி கருணாநிதி, இன்று மு.க.ஸ்டாலின் ஒரு சிறந்த ஆட்சியை பார்போற்றுகிற ஆட்சியை இன்றைக்கு நமக்கு கொடுத்திருக்கிறார்கள் என்றார்.

இதற்குதான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். மாஜி அதிமுக அமைச்சர் டி.ஜெயக்குமாரின் ட்விட்டர் பதிவு: நன்றி கெட்ட கேகேஎஸ்எஸ்ஆர் ...நாவடக்கம் தேவை..தமிழ்நாடு கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் வளர்ந்து இருப்பதற்கு காரணம் அம்மா அவர்கள் முன்னெடுத்த வளர்ச்சித் திட்டங்கள் தான், நீங்கள் இன்று அமைச்சராக இருப்பதற்கு உங்களை அடையாளம் காட்டியது அஇஅதிமுக தான் என்பதை மறந்துவிடாதீர்கள். நன்றி மறந்த உங்களுக்காக ஆரம்ப காலங்களில் பல தேர்தல்களில் உழைத்து அதிமுக- தான் தவறிழைத்துவிட்டது. விசுவாசிகளுக்கு மட்டுமல்ல உங்களை போன்ற துரோகிகளுக்கும் வாழ்வு தந்தவர் அம்மா அவர்கள் தான் என்பதை மறந்துவிடாதீர்கள். "யாகாவாராயினும் நாகாக்க". இவ்வாறு ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications