”நடிப்பில் ரஜினி, சிவாஜியை தோற்கடிப்பார்” ஓபிஎஸ்-க்கு அதிமுகவில் இடமில்லை..ஜெயக்குமார் பேட்டி!
சென்னை: நடிகனாக இருந்திருந்தால் ரஜினி, சிவாஜியையே தோற்கடித்திருப்பார் ஓபிஎஸ் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் மீண்டும் உச்சத்தில் இருக்கும் சூழலில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்த எம்எல்ஏ ஐயப்பன், திடீரென ஓபிஎஸ்-க்கு ஆதரவளித்தார். இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர் தலைவர்கள், எம்எல்ஏ-க்களை நம்பி கட்சி தொடங்கவில்லை. தொண்டர்களை நம்பி கட்சி தொடங்கப்பட்டது. கழகம் நன்றாக செயல்பட்டு வரும்போது எம்எல்ஏ ஐயப்பன் அணி தாவுவதால் எந்த பின்னடைவும் இல்லை.

ஜெயக்குமார் பேச்சு
பணம் பாதாளம் வரை பாயும் என்று சொல்லுவார்கள். ஓபிஎஸ், சசிகலா, தினகரனிடம் கோடிக்கோடியாக பணம் குவிந்துள்ளது. அந்த பணம் மூலம் அதிமுக நிர்வாகிகளை பிடிக்கும் வேலையை செய்ய தொடங்கியுள்ளனர். அதன் முதல் கட்டம் தான் எம்எல்ஏ ஐயப்பன். அதிமுகவை அசைக்க முடியாது. எங்கள் தரப்பில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

நல்ல நடிகர் ஓபிஎஸ்
பணம் மூலம் அதிமுகவை கைப்பற்றலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் தொண்டர்களை நம்பி இருக்கிறோம். உத்தமனை போல் பேசுவதற்கு ஓபிஎஸ் போல் ஒரு நடிகர் இருக்க முடியாது. அவர் நடிக்க வந்தால் ஆஸ்கர் விருதை கூட பெறுவார். ஒருவேளை சினிமா பக்கம் சென்றிருந்தால் நடிகர் ரஜினி, சிவாஜியையே தோற்கடித்திருப்பார்.

தர்மயுத்தம் தொடங்கியது ஏன்?
சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கியவர் ஓபிஎஸ் தான். அதேபோல் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்று பேசிவிட்டு, விசாரணை ஆணையத்தின் சம்மனுக்கு பதிலளிக்க போகாதவர் ஓபிஎஸ். அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர். இவ்வளவு ஏன் இடைத்தேர்தலில் கூட அதிமுகவை தோல்வியடைய வைத்தனர்.

மூவருக்கும் இடமில்லை
ஆனால் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வைத்தார். ஓபிஎஸ்-க்கு சொல் புத்தியும் இல்லை. சுயபுத்தியும் இல்லை. அதிமுகவில் சசிகலா, பன்னீர்செல்வம், தினகரனுக்கு எப்போதும் இடமில்லை. சசிகலா, தினகரன் சார்பில் எனக்கும் பெட்டி, பெட்டியாக பணம் தரப்படும் என்று ஆசை காட்டப்பட்டது. ஆனால் கொள்கை பிடிப்புடன் நான் செயல்பட்டேன். தொண்டர்களை நம்பியே அதிமுக உள்ளது. தலைவர்களை நம்பி இல்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications