எடப்பாடிதான் எங்க தலைவன்.. ஆதரவாக ஓடி வந்த விந்தியா.. சரவெடி பேட்டி
சென்னை: அதிமுகவில் தொண்டர்கள் கொண்டாடும் ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் விந்தியா தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேச அவரது உதவியாளரிடம் தாம் நேரம் கேட்டதாகவும் ஆனால் அவர் பிஸியாக இருப்பதாக பதில் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை ஜாதியை வைத்து பிரித்துவிடலாம் என எண்ணினால் அது நடக்காத காரியம் என ஒரே போடாக போட்டுள்ளார் நடிகை விந்தியா.

எடப்பாடிக்கு ஆதரவு
நடிகையும், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான விந்தியா தனது ஆதரவை எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்களால் கொண்டாடப்படும் தலைவராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார் என்றும் அரசியலை பொறுத்தவரை எதிர்காலத்தை வைத்து தான் நிர்வாகிகளும், தொண்டர்களும் முடிவெடுப்பார்கள் எனவும் கூறினார்.

மாவட்டச் செயலாளர்கள்
திமுகவை எதிர்த்து மாவட்டங்களில் அரசியல் செய்து வரும் மாவட்டச் செயலாளர்களுக்கு தான் அந்த கஷ்டம் தெரியும் என்றும் அதிமுகவுக்கு சோதனைகள் வருவது புதிதல்ல எனவும் நடிகை விந்தியா தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமை ஏற்று விரைவில் ஆட்சியையும் தமிழகத்தில் கைப்பற்றுவார் என அவர் நம்பிக்கை பொங்க கூறினார்.

ஓபிஎஸ் பிஸி
ஓ.பன்னீர்செல்வத்திடம் சமாதானம் பேச தாம் முயன்றதாகவும் ஆனால் அவரது உதவியாளர் பிஸியாக இருக்கிறார் என தகவல் அளித்ததாகவும் கூறினார். எடப்பாடி பழனிசாமியும் சரி தன்னை போன்ற நிர்வாகிகளும் சரி ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்க வேண்டிய மரியாதையை குறைவில்லாமல் வழங்குவோம் என்றும் அவர் இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது பற்றி தனக்குத் தெரியாது எனவும் கூறினார்.

அதிமுக பொதுக்குழு
நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சந்தித்துக் கொள்வார்கள் என நம்பிக்கை தெரிவித்த விந்தியா, அம்மா, அதிமுக, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை ஒரு போதும் தமிழக மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது என ஒரே போடாக போட்டார்.












Click it and Unblock the Notifications