முன்னாள் எம்பி சத்தியபாமா உள்பட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம்
சென்னை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர் சத்தியபாமா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 12 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த வாரம் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் உள்பட 12 பேரை அதிமுகவிலிருந்து நீக்கி, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மைக்காலமாக கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கெடுவும் விதித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். கடந்த செப்டம்பர் மாதம் அவரது கட்சி பதவிகள் பறிப்புக்குள்ளானார். சத்தியபாமாவின் அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொறுப்புகளில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 30-ஆம் தேதி பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்திக்கு சென்ற செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
அத்துடன் ஓபிஎஸ்ஸுடன் ஒரே காரில் பயணம் செய்து பசும்பொன்னிற்கு செங்கோட்டையன் சென்றார். அத்துடன் மூவரும் சேர்ந்து செய்தியாளர்களையும் சந்தித்தனர். மேலும் சசிகலாவுடனும் செங்கோட்டையன் சந்தித்து பேசியிருந்தார்.
கட்சி பதவி பறித்ததற்கு செங்கோட்டையனிடம் சசிகலா வேதனை தெரிவித்த போது கட்சியில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என செங்கோட்டையன் கூறியிருந்ததாக தெரிகிறது.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மூவரும் துரோகிகள் என்றும் பேசி வைத்துக் கொண்டு ஒன்றாக தேவர் ஜெயந்திக்கு வந்துள்ளார்கள் என்றும் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க எந்த தயக்கமும் இல்லை என கூறியிருந்தார்.
கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்றார். இந்த நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடனும் கட்சி நிர்வாகிகளுடனும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தி வந்தார்.
இதைத் தொடர்ந்து, செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். செங்கோட்டையன் தற்போது கோபிச்செட்டிபாளையம் எம்எல்ஏவாக உள்ளார்.
எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையன் 1977 ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில் போட்டியிட்டு முதல்முறையாக எம்எல்ஏவானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருப்பூர் தொகுதியின் முன்னாள் எம்பியான சத்தியபாமா, ஈரோடு மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிமுகவில் பரபரப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications