கட்சி பதவி, உள்ளாட்சி சீட், ராஜ்யசபா சீட், துணை முதல்வர்.. பேராசைகளால் பேரழிவை நோக்கி அதிமுக!
Recommended Video
சென்னை: அதிமுகவில் குடும்பத்தினருக்கு கட்சி பதவி, உள்ளாட்சி இடம், ராஜ்யசபா இடம் அதிகபட்சமாக துணை முதல்வர் பதவி ஆகியவற்றை முன்வைத்து எழுப்பப்பட்டு வரும் பேராசை கலகக் குரல்களால் அதிமுக பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாளை கூடும் அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் பூகம்பம் வெடிக்குமா? என்பது தெரிந்துவிடும்.
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தாலும் ஒரே கட்சியாக இல்லை. ஒவ்வொரு திசைக்கும் ஒரு பேராசையை வைத்துக் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருக்கின்றனர் சீனியர்கள்.

ஒவ்வொரு அமைச்சரும் ஒரு அணி
அதாவது அதிமுகவில் ஒவ்வொரு அமைச்சரும் ஒரு அணி என்கிற ரீதியாக நாசமாகிப் போய்க் கொண்டிருக்கிறது. இதன் வெளிப்பாடுதான் ஆளுக்கு ஒரு திசையில் பேட்டி கொடுப்பது, பேசி வருவது எல்லாம்.

பேரங்களுக்கான பேச்சுகள்
இந்த பேட்டிகளும் பேச்சுகளும் எதுவும் கொள்கை முடிவின் அடிப்படையிலானது அல்ல. ஒவ்வொரு பேட்டிக்கும் பேச்சுக்கும் பின்னாலும் ஒரு பேராசை பேரம் இருக்கிறது. அதை சாதிக்கத்தான் சட்டாம்பிள்ளைத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால்தான் பேச்சுகள்
அதிமுக எனும் கட்சியை காப்பாற்றுவதற்கும் அதிமுக அரசை தக்க வைத்துக் கொள்ளவும் யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற உடன் முதல்வரும் துணை முதல்வரும் கை கோர்க்கின்றனர். அமைச்சர்கள் கப்சிப் என அடங்கிப் போய்விடுகின்றனர். பின்னர் தூங்கி எழுந்து விழித்தவர்களைப் போல திடீரென போர்க்குரல் எழுப்பி தமக்கான பேராசையை பூடகமாக வெளிப்படுத்துவார்கள். அதாவது தமக்கோ தமது குடும்பத்தினருக்கோ நண்பர்களுக்கோ கட்சி பதவியையோ உள்ளாட்சி பதவியை துணை முதல்வர் பதவியை விரும்புகிறேன் என்பதுதான் அந்த பேட்டி பேச்சின் உட்பொருள். அது கிடைக்காமல் போனால் என்பின்னால் எத்தனை எம்.எல்.ஏக்கள் தெரியுமா? என மீண்டும் முருங்கை மரம் ஏற வேண்டியது. கேட்டது கிடைத்தவுடன் அமைதியாகிவிடுவது..இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

நாளைய கூட்டம்
இதை டெல்லியும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் தற்போதைய நிலையில் உச்சகட்ட குழப்பம் நிலை கொண்டிருக்கிறது. இந்த புயல் வாயு புயலுக்கு முன்னரே நாளைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலேயே கரையை கடக்குமா? அல்லது இன்னொரு கூவத்தாருக்கு காத்திருந்து கரையை கடக்குமா? என்பதுதான் இப்போதைய நிலை.












Click it and Unblock the Notifications