தேர்தலில் உள்ளடி வேலைகளை கண்டுகொள்ளாத அதிமுக தலைமை.. ஜெயக்குமார் தொடங்கி... கிளம்புதா புதிய பூதம்?
சென்னை: அதிமுகவுக்குள்தான் எத்தனை எத்தனை அக்கப்போர்... சட்டசபை குழு தலைவர் பதவிக்காக ஈபிஎஸ், ஓபிஎஸ் கோஷ்டி அடித்துக் கொள்ளாத குறையாக முட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது மாஜி அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி கட்சியின் மூத்த நிர்வாகிகள், தேர்தலில் உள்ளடி வேலைபார்த்தவர்களை கட்டம் கட்டுங்க என கலகக் குரல் எழுப்ப தயாராகி வருகின்றனராம்.
அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் அதிமுக என்கிற கட்சி தேர்தல் வரை தாக்குப் பிடித்தது. இப்போது சட்டசபை தேர்தலில் தோற்று அதிகாரத்தை பறிகொடுத்திருக்கிறது அதிமுக.

அதிமுகவில் வெடிக்கும் பஞ்சாயத்து
இதனால் 4 ஆண்டுகாலம் நீடித்த அதிமுகவின் கட்டுக் கோப்பு இப்போதே கலகலக்க தொடங்கிவிட்டது. சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசப்பட்ட காரசார விவாதங்களே இதனை உறுதிப்படுத்தி இருக்கின்றன.

4 மணிநேரமாகியும் முடிவு எடுக்கலையே..
4 மணிநேரம் நடந்தும் கூட அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை. இதனால் வரும் திங்கள்கிழமையன்று மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறது அதிமுக. சென்னையில் நேற்று நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தேர்தலில் தோல்வி அடைந்த மாஜி அமைச்சர் ஜெயக்குமாரும் கூட பங்கேற்றிருந்தார்.

உள்ளடிகளால் தோல்வி
ஆனால் ஜெயக்குமார் ஒருவித இறுக்கத்தை காட்டிக் கொண்டுதான் இருந்தார். இது தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் நாம் விசாரித்த போது, சட்டசபை தேர்தலில் மதுசூதனன் கோஷ்டி பழிவாங்கிவிட்டது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மதுசூதனனை ஜெயிக்காவிடாமல் பார்த்து கொண்டார் ஜெயக்குமார். இப்போது மதுசூதனன் கோஷ்டியின் நேரம்.. அவர்கள் வேலையை காட்டியதால் ஜெயக்குமார் தோற்க நேரிட்டது.

கண்டுகொள்ளாத அதிமுக தலைமை
இது தொடர்பாக ஏற்கனவே ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரது கவனத்துக்கும் ஜெயக்குமார் தரப்பு கொண்டு சென்றதாம். அப்போதும் இதுபற்றி அதிமுக தலைமை கண்டுகொள்ளவில்லையாம். தேர்தல் தோல்விக்குப் பின்னரும் கூட தம்மிடம் ஓபிஎஸ், ஈபிஎஸ் யாருமே பேசவில்லையாம். இதனால்தான் சேலத்துக்குப் போய் எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் இருந்தாராம் ஜெயக்குமார்.

விரைவில் பூகம்பங்கள்?
எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்குப் போன போதும் கூட குமுறலை வெளிக்காட்டாமலேயே இருந்துவிட்டடார். ஜெயக்குமார் மகனின் எதிர்காலம் கருதி கனத்த மவுனம் காக்கிறார் இப்போது. ஆனால் ஜெயக்குமாரைப் போல அதிமுகவினராலேயே தோற்கடிக்கப்பட்ட சீனியர்கள், எந்த நிமிடத்திலும் கலகக் குரல் எழுப்பக் கூடிய நிலைமைதான் இருக்கிறது என்கின்றனர். அதிமுகவுக்குள் அடுத்து அடுத்து எத்தனை பூதங்களும் பூகம்பங்களும் வெடிக்க காத்திருக்கின்றனவோ?












Click it and Unblock the Notifications