ADMK SETBACK: அதிமுகவை கைவிட்ட கவுண்டர் தொகுதிகள்.. வாய்ப்பளித்த வன்னியர் தொகுதிகள்!
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான தொகுதிகளில் தவெக முன்னிலை வகிக்கிறது. சென்னையில் திமுக கோட்டையிலும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் அதிமுக கோட்டையிலும் ஓட்டை விழுந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் அதிமுக மலை போல நம்பிய கவுண்டர் சமுதாயத்தினர் இந்தமுறை அதிமுகவுக்கு ஆதரவாக இல்லை. சேலம், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் வன்னியர் சமுதாயத்தினர் தான் அதிமுகவுக்கு சாதகமாக செயல்பட்டனர். என்ன நடந்தது கொங்கு மண்டலத்தில்
கொங்கு மண்டலத்தை இரண்டாக பிரிக்கலாம். கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் கவுண்டர் சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் வன்னியர் சமுதாயத்தினர் அதிகமாக உள்ளனர். சேலத்தில் கவுண்டர், வன்னியர் இரண்டு சமுதாயத்தினரும் கணிசமாக உள்ளனர். கடந்த 2006 1996 தேர்தல்களில் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தோல்வியடைந்தார்.

பழனிசாமி சென்டிமென்ட்
பழனிசாமி தோல்வியடைந்த 2 தேர்தல்களிலும் அங்கு பாமக தான் வெற்றி பெற்றது. அதனால் பாமகவுடன் கூட்டணி இருப்பதை எடப்பாடி பழனிசாமி சென்டிமென்டாக கடைபிடித்து வருகிறார். இந்தமுறையும் பாமகவுடன் கூட்டணி வைத்திருப்பது அதிமுகவினருக்கு கைக்கொடுத்துள்ளது. வன்னியர்கள் கணிசமாக உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் மாவட்டங்களில் அதிமுக ஓரளவுக்கு வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறது.
கவுண்டர்கள் கணிசமாக உள்ள கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்கள் அவர்களுக்கு பெரிதாக கைக்கொடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி, கருப்பணன் என்று அந்தக் கட்சியின் முக்கிய பவர்சென்டர்கள் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாவர். இது கடந்த 2021 தேர்தலில் அதிமுகவுக்கு சாதகமாக இருந்தது. கோவை மாவட்டத்தில் 10க்கு 10, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் தலா 5 தொகுதிகள், சேலத்தில் 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை கடந்தமுறை வென்றிருந்தனர்.
தலைகீழாக மாறியது
இந்தமுறை முடிவு அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. கோவையில் உள்ள 10 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக முன்னிலை வகிக்கிறது. தொண்டாமுத்தூர் தொகுதியில் வேலுமணி முன்னிலையில் உள்ளார். அதிமுக வலுவாக உள்ள சூலூர், மேட்டுப்பாளையம் போன்ற தொகுதிகளில் கூட அந்தக் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதேபோல ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களிலும் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவுடன், பாஜக கூட்டணி அமைத்திருப்பதால் இந்தமுறை கவுண்டர் சமுதாயத்தின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என்று அவர்கள் அதிகம் நம்பினார்கள். ஆனால் கவுண்டர் சமுதாயம் உள்ளிட்ட மொத்த கொங்கு மண்டலத்திலும் அவர்கள் எதிர்பார்த்தது நடைபெறவில்லை. கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் இந்தமுறை திமுக கூடுதல் கவனம் செலுத்தியது. மேலும் தவெக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கவுண்டர் சமுதாயத்தினர் அதிமுகவை கைவிட்டது எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications