மீண்டும் பாஜக பிடியில் சிக்கியது அதிமுக!1998 முதல் அதிமுக- பாஜக கூட்டணி சாதித்ததா? உறவு முறிந்த கதை!
சென்னை: 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்து உள்ளது. சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சந்திப்புக்குப் பின்னர் பாஜக- அதிமுக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1998-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போதுதான் பாஜகவுடன் அதிமுக முதல் முறையாக கூட்டணி சேர்ந்தது. அந்த தேர்தலில் அதிமுக 23; பாஜக 5; பாமக 5;மதிமுக 5; ஜனதா கட்சி 1 இடத்தில் போட்டியிட்டன. இந்த தேர்தலில் அதிமுக 18 இடங்களிலும் பாஜக 3, பாமக 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. அப்போதுதான் மத்தியில் வாஜ்பாய் பிரதமராக ஓராண்டு காலம் ஆட்சி செய்தார். இந்த ஆட்சியை ஒரு ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கவிழ்த்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக- பாஜக கூட்டணி உறவு முறிந்தது.

இதன் பின்னர் 2004-ம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் அதிமுக இணைந்தது. அப்போதைய 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக 33 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் போட்டியிட்டன. அந்த தேர்தலில் திமுக கூட்டணியே 39 இடங்களையும் கைப்பற்ற அதிமுக- பாஜக கூட்டணியால் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை. இதன் பின்னர் மீண்டும் அதிமுக- பாஜக இடையேயான உறவும் முறிந்தது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைந்த பின்னர், பாஜகவின் பிடியில் அதிமுக சென்றது. 2021-ம் ஆண்டு அதிமுக - பாஜக கூட்டணி, சட்டசபை தேர்தலை எதிர்கொண்டது. அந்த தேர்தலில் அதிமுக 179; பாஜக 20; பாமக 23 இடங்களில் போட்டியிட்டன. இதில் அதிமுக 66 இடங்களிலும் பாமக 5; பாஜக 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஆனால் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் தனித்தனியே போட்டியிட்டு பெரும் தோல்வியைத் தழுவின. இந்த நிலையில் தற்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மீண்டும் இணைந்துள்ளது.
சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்குப் பின்னர் பாஜக- அதிமுக கூட்டணி அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவுடனான அதிமுக கூட்டணி முறிந்த கதைகள்: 1999-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியை ஒரு ஓட்டில் அதிமுக கவிழ்த்தது. இதனால் அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது. இதனையடுத்து 2004-ம் ஆண்டு மீண்டும் அதிமுக- பாஜக கூட்டணி அமைந்தது. அப்போதைய 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் கூட இரு கட்சிகளும் வெல்லவில்லை. இதனால் தமிழ்நாட்டில் மதமாற்ற தடை சட்டத்தை வாபஸ் பெற்றார் ஜெயலலிதா. அப்போதுதான் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். இதனால் அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இயல்பாகவே அதிமுக- பாஜக கூட்டணி அமைந்தது. ஆனால், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா குறித்து பாஜக தலைவரான அண்ணாமலை கடுமையாக விமர்சித்ததால் மீண்டும் பாஜக- அதிமுக கூட்டணி உறவு கசந்தது. தற்போது மீண்டும் அதிமுக- பாஜக கூட்டணி உருவாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications