தம்பி சாட்டை துரைமுருகனை பழிவாங்கியுள்ளது திமுக அரசு.. சப்போர்ட்டாக வந்த அதிமுக மாஜி ஜெயக்குமார்!
சென்னை: மேடைகளில் ஸ்டாலின் அரசின் தோல்விகளை அடுக்கியதற்காக சாட்டை துரைமுருகனை பழிவாங்கி உள்ளது திமுக அரசு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட சாட்டை துரைமுருகன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்தும், முதல்வர் ஸ்டாலின் குறித்தும் அவதூறான கருத்துகளை பேசியதாக அவர் மீது திமுகவினர் புகார் அளித்தனர்.

திமுக தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, தென்காசி குற்றாலம் பகுதியில் ஹோட்டலில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்தனர். சாட்டை துரைமுருகன் கைதுக்கு நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாட்டை துரைமுருகன் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். விமர்சித்ததற்காக சாட்டை துரைமுருகனை பழிவாங்கி உள்ளது திமுக அரசு என குற்றம்சாட்டி உள்ளார் ஜெயக்குமார்.
ஜெயக்குமார் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தம்பி சாட்டை துரைமுருகன் அவர்களை கைது செய்திருப்பது கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் செயல்! அவதூறு பரப்புவதில் அவார்டுகள் பல வாங்கி வைத்துள்ள இயக்கமே திமுக தான்!
சாட்டை சேனலில் திமுக அரசின் அவலங்களை தொடர்ந்து அம்பலப்படுத்தியதற்காகவும் மேடைகளில் ஸ்டாலின் அரசின் தோல்விகளை அடுக்கியதற்காகவும் தமிழ்நாட்டை சூறையாடி தின்று கொழுத்த திமுகவை விமர்சித்து வந்ததற்காகவும் பழிவாங்கி உள்ளது திறனற்ற திமுக அரசு! பாசிச ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் ஸ்டாலின், அவருடைய ஆட்சிக்கான முடிவுரையே அவரே எழுதிக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்!!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications